"பேச்சுவார்த்தை" முடியலயோ.. வெளியே வந்ததும்.. சசிகலா கையில் வந்து விழுந்த "நோட்டீஸ்".. செம டென்ஷன்!
சசிகலாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் வந்திருக்கிறது
சென்னை: இன்னும் "பேச்சுவார்த்தை" முடியலையோ என்ற கேள்விதான் எழுகிறது சசிகலாவுக்கு அமலாக்கத்துறை விடுத்துள்ள நோட்டீஸைப் பார்க்கும்போது.
ஒரு விசாரணை அமைப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்புவதை யாரும் கேள்வி கேட்கவும் முடியாது, உள்நோக்கம் கற்பிக்கவும முடியாதுதான். ஆனால் சசிகலா விடுதலையான அதே நாளில் அவரது கையில் நோட்டீஸும் வந்து விழுந்துள்ளதுதான் பல விவாதங்களை எழுப்பியுள்ளது.
அமலாக்கத்துறை விடுத்துள்ள நோட்டீஸையும், கர்நாடக சிறைத்துறை அதிகாரிகளே, சசிகலாவிடம் ஒப்படைத்துள்ளனர் என்பதுதான் விசேஷமானது. அதாவது சசிகலா அடைக்கப்பட்டிருந்த பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்த நோட்டீஸ்தான் அது.
சசிகலா
சொத்துக் குவிப்பு வழக்கில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்று கடந்த 4 வருடமாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார் சசிகலா. நேற்றுதான் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கொரோனா சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் சசிகலா உடனடியாக வீடு திரும்பவில்லை.
அதிகாரிகள்
அவர் மருத்துவமனையில் இருந்ததால் விடுதலை சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் மருத்துவமனைக்கே கொண்டு வந்து அவரிடம் கையெழுத்துப் பெற்றுச் சென்றனர் சிறை அதிகாரிகள். கூடவே ஒரு நோட்டீஸையும் கொடுத்து விட்டுப் போயுள்ளனர்.
ரெய்டு
பிரித்துப் படித்தால்.. அது அமலாக்கத்துறை அனுப்பியிருந்த நோட்டீஸாகும். இது எதற்கு இந்த நோட்டீஸ் என்றால் சசிகலா சிறையில் இருந்தபோது கடந்த ஆண்டு சசிகலாவின் வீடு, அவரது உறவினர்களின் வீடு, அலுலகம் உள்ளிட்டவற்றில் ஐடி ரெய்டு நடந்தது. அப்போது பல ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்கள் தொடர்பாக விளக்கம் கேட்டுத்தான் சிறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது அமலாக்கப் பிரிவு.
அதிகாரிகள்
அந்த நோட்டீஸைத்தான் தற்போது சசிகலாவிடம் கொடுத்துள்ளனர் அதிகாரிகள். சிறையிலிருந்து விடுதலையானாலும் கூட அவரை விட்டு இந்த விசாரணைகள் ஓயாது போல என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சசிகலாவால் தேர்தலில் போட்டியிட முடியாது என்றாலும் கூட அவரால் கட்சியை நடத்த முடியும், பல விஷயங்களை சாதிக்க முடியும் என்பதால் அவர் முழுவதுமாக இன்னும் முடிந்து போன சக்தி அல்ல.. அவராலும் சலசலப்புகளை ஏற்படுத்த முடியும்.
பரபரப்பு
இதனால்தான் சிலர் தொடர்ந்து சசிகலாவை தங்களது கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்வதாக தெரிகிறது. இதன் ஒரு அடையாளமாகவே இந்த விசாரணை, விளக்கம் என்றெல்லாம் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. எது எப்படியோ சசிகலாவின் ஆட்டம் எப்படி இருக்கப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும். இடை இடையே இதுபோன்ற விசாரணைகளும் குறுக்கிடவே செய்யும் என்றும் எதிர்பார்க்கலாம்.