ஜெ. நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை இறக்கை... துபாயில் இருந்து பொறியாளர்கள் வருகை
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவையின் இறக்கை போன்று வடிவமைக்க துபாயில் இருந்து பொறியாளர்களும், கட்டுமான ஊழியர்களும் சென்னை வந்துள்ளனர்.
வரும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் அவரது நினைவிடத்தை திறந்து வைக்க திட்டமிட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
கடந்த ஆண்டு மே மாதம் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே அதிகம் இணையதள சேவை முடக்கம் நடப்பது நம்ம 'டிஜிட்டல்' இந்தியாவில்தான்! காரணம் வன்முறைகள்
ரூ. 50 கோடி
ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மெரினாவில் ரூ.50 கோடி மதிப்பில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. பீனிக்ஸ் பறவையின் இறக்கை போன்று நுழைவுவாயில் பகுதி வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் வரும் பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.
துபாய் டூ சென்னை
ஜெயலலிதா நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை இறக்கை போன்ற பகுதியை பொருத்துவதற்காக துபாயில் இருந்து கட்டிடக்கலை நிபுணர்கள் தமிழகம் வந்துள்ளனர். அவர்களின் மேற்பார்வையிலும், ஆலோசனையின் பேரிலும் பீனிக்ஸ் பறவையின் இறக்கை போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
பிரமாண்டம்
வரும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதியன்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பதால், அன்றைய தினமே அவரது நினைவிடத்தையும் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த விழாவை அவர் மிக பிரமாண்டமாக நடத்த விரும்புகிறாராம்.
கண்காணிப்பு
ஜெயலலிதா நினைவிடம் முழு வடிவத்தை பெற உள்ளதால் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் கட்டுமானப் பணிகளை கண்காணித்து வருகின்றனர். இன்னும் நூறாண்டு கடந்தாலும் தனது ஆட்சியில் கட்டப்பட்ட ஜெ. நினைவிடம் கம்பீரமாக இருக்க வேண்டும் என நினைக்கிறாராம் முதலமைச்சர்.