13 வயது சிறுமி பலாத்காரம்.. எண்ணூர் இன்ஸ்பெக்டர், பாஜக நிர்வாகி அதிரடியாக கைது.. பகீர் தகவல்கள்
சென்னை: 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எண்ணூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் பாஜக நிர்வாகி ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சபீனா என்பவர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் ஒரு புகார் அளித்தார். அதில் மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து எனது 13 வயதான மகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்கள்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 8 பேரை கைது செய்தார். அவர்கள் இதையே தொழிலாக செய்து வருவதும் தெரியவந்தது.
புரோக்கர்கள் கைது
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா ஆகிய 4 பேர் சேர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதியானது. இதில் மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகிய 4 பேர் புரோக்கர்களாக செயல்பட்டதும் உறுதியானது. இவர்கள் தான், வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்து வைத்து வந்துள்ளார்கள்.
பாலியல் புரோக்கர்கள்
கைது செய்யப்பட்ட மதன்குமார், ஷாகிதா பானு, சந்தியா, மகேஷ்வரி, வனிதா, விஜயா ஆகிய 6 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக், முஸ்தபா ஆகியோரும் புரோக்கர்களாக செயல்பட்டதை தெரிவித்தனர்.. இதைதயடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
இன்ஸ்பெக்டர் உல்லாசம்
சந்தியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வடசென்னை வடக்கு மாவட்ட பாஜவின் செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் (44) என்பவர் 13 வயது சிறுமி மற்றும் பல இளம்பெண்களை போலீஸ் அதிகாரிகளுக்கு தேவை என்று அழைத்துச் செல்வார் என கூறியிருந்தார். அதை தொடர்ந்து, பாஜவை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ள சி.புகழேந்தி என்பவருக்காக பலமுறை சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாக தெரிவித்தார்.
எண்ணூர் இன்ஸ்பெக்டர்
இது தொடர்பாக போலீசிடம் ராஜேந்திரன் விசாரணையின் போது கூறுகையில், நானும், இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் 15 ஆண்டு நண்பர்கள். ரெட்ஹில்ஸ் பகுதியில் பணியாற்றி வந்த அவர் கடந்த ஓராண்டாக எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இருவரும் உல்லாசம்
என்னுடைய அலுவலகத்துக்கு சிறுமியை அழைத்து வருவேன். அங்கு புகழேந்தியும் வருவார். அங்கு வைத்து இருவருமே சிறுமியுடன் உல்லாசமாக இருப்போம் என்றார். இதை தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், வடசென்னை கூடுதல் கமிஷனர் அருண் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் புகழேந்தி கைது செய்யப்பட்டார். துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி நேற்று இரவு இன்ஸ்பெக்டர் புகழேந்தியை கைது செய்தார்.
சிறையில் அடைப்பு
அவர் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்துவது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தியை, கூடுதல் கமிஷனர் அருண் பரிந்துரையின்பேரில், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சஸ்பெண்ட் செய்தார்.