கர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்
சென்னை: மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதியை கர்நாடக அரசுக்கு வழங்க கூடாது என மத்திய அரசை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு மற்றும் காவிரி வடிநில மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே புதியஅணை கட்ட கர்நடகத்தை அனுமதிக்க கூடாது எனவும் முதல்வர் கோரியுள்ளார்.
மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட முயற்சிப்பது, நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகம் வழங்கியுள்ள மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என ஏற்கனவே தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மேகதாது அணை திட்டம் என்பது கர்நாடக அரசு கூறுவது போல தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான திட்டமல்ல.
அதே போல மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதியை கர்நாடகம் முன்கூட்டியே பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். காவிரியின் மேற்பகுதியில் அணை கட்டினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் முற்றிலுமாக பாதிக்கப்படும்.
காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது. தற்போதைய சூழலில் கர்நாடகத்தின் காவிரி நீரவாரி நிகம நியமிதா அமைப்பின், மேகதாது அணை கட்டும் கோரிக்கையை நிராகரிப்பது தான் சரியான முடிவாக இருக்கும்.
எனவே தமிழகத்தின் நிலையை கருத்தில் கொண்டு காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் புதிய அணை கட்ட கேட்கும் கர்நாடகத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் பழனிசாமி.
மேலும் மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறு, மத்திய நீர்வள ஆணையத்திற்கும் பிரதமர் உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
தமிழகம் மற்றும் காவிரியை பயன்படுத்தும் இதர மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல், மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.