ராமன் லட்சுமணனுக்கு இருக்கும் புரிதல்...ஓபிஎஸ், இபிஎஸ்க்கு இருக்கிறது....ஆர் பி உதயகுமார் புகழாரம்!
சென்னை: அதிமுக ஒற்றுமையாக இருக்கிறது. இளைஞர்கள் தாமாக முன் வந்து அதிமுகவில் இணைகின்றனர். ராமன் லட்சுமணனுக்கு இருக்கும் புரிதல் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் இருக்கிறது என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவெற்றியூரில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், ''அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது. இளைஞர்கள் தாமாக முன்வந்து அதிமுகவில் இணைகின்றனர். முதல்வர் யார் என்பது பற்றி பேசக்கூடாது என்று 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனால் யாரும் அதுபற்றி பேசுவதில்லை. ராமன் லட்சுமணனுக்கு இருக்கும் புரிதல் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் இருக்கிறது'' என்றார்.
இதற்கு முன்னதாக நேற்று, திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசி இருந்தார். அப்போது, ''அரியர் மாணவர்கள் தமிழக முதல்வருக்கு போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்து வருகின்றனர். 20-லட்சம் மாணவர்களின் காவல் தெய்வமாக தமிழக முதல்வர் திகழ்ந்து வருகிறார். மாணவர்கள் தேர்வு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மாறி மாறி பேசி வருகிறார்'' என்று தெரிவித்து இருந்தார்.