நிம்மதி பெருமூச்சு விட்ட ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.. டென்ஷனை தணித்த தீர்ப்பு!
- கோயா
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கத் தடை விதித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் 'அப்பாடா' என நிம்மதி பெரு மூச்சு விட வைத்ததாக கூறுகிறார் அதிமுக முன்னணி நிர்வாகி ஒருவர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் 13 உயிர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானதால், மக்களின் கோபத்துக்கு ஆளானது தமிழக அரசு. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக கரை வேட்டி கட்டவே அந்தக் கட்சியினர் அஞ்சும் நிலை ஏற்பட்டது.
நிலைமை படிப்படியாக மாறத்தொடங்கிய வேளையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை இல்லை என தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்தது. இதனால் மீண்டும் தூத்துக்குடியில் பதட்டம் பற்றிக்கொண்டது. திக்..திக்.. என்று நாட்கள் நகர்ந்த நிலையில்,தமிழக அரசு தாக்கல் செய்த மேல்னுறையீட்டில் ஆலையை திறக்க தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
இந்த தீர்ப்பின் மூலம் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் சட்டை காலரை தூக்கிவிட தொடங்கியுள்ளனர். தேர்தல் நேரத்தில் தீர்ப்பு எக்குத்தப்பாக வந்து, எசகுபிசகாக ஏதாவது நடந்து விடுமோ என்று ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் தூத்துக்குடி ஆட்சியரை உஷார் படுத்திய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அவர்கள் வயிற்றில் பால்வார்த்திருக்கிறதாம்.
தீர்ப்பு எதிராக வந்தால் தூத்துக்குடி மக்களை எப்படி கையாள்வது, தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து நேற்று இரவு வரை விவாதித்ததாம் அதிமுக தலைமை. ஆனால் எல்லாம் நல்லபடியாக நடந்ததால், இதற்காக பாராட்டுவிழா நடத்தி எடப்பாடியை மனசை குளிர்விக்கும் ஐடியா உள்ளதாம் முத்துநகர் அதிமுகவினருக்கு.