ஊடகங்களில் கருத்து சொல்லக் கூடாது.. மீறினால் கடும் நடவடிக்கை.. ஈபிஎஸ் - ஓபிஎஸ் எச்சரிக்கை
அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்த நிலையில் முதல்வர், துணை முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். முதல்வர் வேட்பாளர் பற்றி அதிமுகவில் கடந்த சில நாட்களாக சர்ச்சை எழுந்த நிலையில் கட்சியினர் கட்டுப்பாட்டுடன் இணைந்து வெற்றி பெற வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுபவர் யார் என்ற கேள்வி திடீரென எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு எம்எல்ஏக்கள் கூடி முதல்வரை தேர்வு செய்வோம் என்று கூறினார் செல்லூர் ராஜூ.
செல்லூர் ராஜூ பற்ற வைத்த சின்னத் தீப்பொறியை கிளறி விட்டவர் ராஜேந்திர பாலாஜி. அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ட்வீட் போட்டார். அதே நேரத்தில் அவருக்கு ஆதரவாக ஊதி விட்டார் அமைச்சர் உதயகுமார். அதெல்லாம் முடியாது முடியாது அத்தனை கோட்டையும் அழிங்க முதல்ல இருந்து போடுங்க என்பது போல சொன்னார் அமைச்சர் ஜெயக்குமார். ராஜேந்திரபாலாஜி சொல்வதை எல்லாம் சீரியஸா பார்க்காதீங்க என்று சொன்னார் ஜெயக்குமார்.
AIADMK: போஸ்டர் பரபரப்பு... கலக்கத்தில் அதிமுக... 2ஆம் கட்ட சந்திப்பு முடிந்தது!!
அமைச்சர்கள் ஆலோசனை
இப்படி நான்கு நாட்களாக முதல்வர் பற்றிய பேச்சு பரபரப்பு ஏற்படுத்தி வந்த நிலையில் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என்று போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்கள் பெரியகுளம் பகுதி மக்கள். இது போதாதா? நெருப்பு கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டது. கூட்டுங்க பஞ்சாயத்தை என்பது போல அமைச்சர்கள் ஓபிஎஸ் வீட்டுக்கும் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கும் ஓடி ஓடி பேசி தீர்த்தனர்.
பெரியகுளம் போஸ்டர்
ஒரு பக்கம் ஆலோசனை நடந்த போதே எப்பா யாருப்பா போஸ்டர் ஒட்டுனது அதை முதல்ல கிழிங்கப்பா என்று ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட அடுத்த நொடியே ஒட்டிய சுவடு கூட தெரியாமல் கிழித்தனர். ஏன் ஒட்டுவானே அப்புறம் ஏன் கிழிப்பானேன் என்றுதானே கேட்கிறீர்கள், அதுவும் ஒரு அரசியல் ஸ்டண்ட்தான். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று கவுண்டமணி பாணியில் சொல்ல வேண்டியதுதான்.
ஓபிஎஸ் ஈபிஎஸ் வீட்டில் ஆலோசனை
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு வந்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஒருவழியாக ஆலோசனை முடிவுக்கு வந்தது. அத்தனை பேரும் நேராக முதல்வர் பழனிச்சாமி வீட்டிற்குப் போய் ஆலோசனை நடத்தினர்.
இணைந்து அறிக்கை
இன்று காலை முதலே சென்னை பசுமை வழிச்சாலை பரபரப்பாகவே காணப்படுகிறது. அதிமுகவில் அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ராணுவக்கட்டுப்பாடு
அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல ராணுவக்கட்டுப்பாட்டோடு இருந்து அதிமுக தொடர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றும் கட்சிக்கு எதிராக ஊடகங்களின் கருத்து சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொண்டர்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உரிய நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.