கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேச அதிமுகவினருக்கு தடை.. ஈபிஎஸ்- ஓபிஎஸ் அதிரடி!
சென்னை: கட்சியின் செயல்பாடுகள் குறித்து தொண்டர்கள் யாரும் வெளியே கருத்து தெரிவிக்கக் கூடாது என ஈபிஎஸ் , ஓபிஎஸ் ஆகிய இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்றும் தற்போதைய இரட்டை தலைமையால் முடிவுகளை உடனுக்குடன் எடுக்க முடியவில்லை என்றும் இதுவே தேர்தல் தோல்விக்கு காரணம் என்றும் நேற்றைய தினம் மதுரையில் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கருத்து தெரிவித்திருந்தார்.
அதிலும் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவரே அதிமுக தலைமை பதவியை ஏற்க வேண்டும் என கூறியிருந்தார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்பட்டது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து தொண்டர்கள் வெளியே தெரிவிக்கக் கூடாது. கடந்த சில நாட்களாக கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு தகவல் தருவது சரியல்ல.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவையா?... அமைச்சர் செங்கோட்டையன் பதில் இதுதான்
அரசியல் மூலம் நாம் வேண்டுவது சில்லறை பதவியையோ சிங்கார வாழ்வையோ அல்ல. கட்சியினர் தங்கள் கருத்துகளை பொதுக் குழுவிலோ அல்லது செயற்குழுவிலோ மட்டுமே தெரிவிக்க வேண்டும். கட்சியின் நிர்வாக முறைகள், தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சியின் முடிவுகள் குறித்து கட்சியினர் யாரும் பொதுவெளியில் கருத்து தெரிக்க கூடாது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் ராஜன் செல்லப்பா, அவரது கருத்தை ஆதரித்த குன்னம் ராமசந்திரன் உள்ளிட்டோருக்கு அதிமுக தலைமை கடிவாளம் போட்டு விட்டது என்றே கூறலாம்.