விஸ்வரூபம் எடுக்கும் உட்கட்சி பூசல்.. 2 துருவங்களாக நிற்கும் அதிமுக தலைகள்.. ஓபிஎஸ் vs இபிஎஸ்?
அதிமுக கட்சியின் உட்கட்சி விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.
Recommended Video
சென்னை: அதிமுக கட்சியின் உட்கட்சி விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு பின் அதிமுக கட்சிக்குள் நிலைமை அவ்வளவு ஒன்றும் சரியாக இல்லை என்றுதான் கூற வேண்டும். அதிலும் லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது அக்கட்சியை இரண்டு துருவங்களாக பிரித்து உள்ளது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தோல்வியை தழுவியது. ஆனாலும் சட்டசபை இடைத்தேர்தலில் போதுமான இடங்களை வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
என்ன சிக்கல்
அந்த சமயத்தில், சட்டசபை இடைத்தேர்தலில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கவனம் செலுத்தவில்லை. அவர் தன் மகன் போட்டியிட்ட தேனி லோக்சபா தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஆட்சியை குறித்தும், பெரும்பான்மை குறித்தும் கவலைப்படவே இல்லை என்று புகார் எழுந்தது. இது அதிமுகவில் முதல் பிளவை ஏற்படுத்தியது.
அடுத்து என்ன
அதற்கு அடுத்தபடியாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லியில் பாஜக தலைகளை அடிக்கடி சந்தித்ததும் சர்ச்சையானது. அதிமுக ஆட்சிக்கு எதிராக அவர் காய் நகர்த்துகிறார் என்று அப்போதே புகார் எழுந்தது. தனிப்பட்ட வகையில் பாஜக தலைவர்களை சந்தித்து , அதிமுகவில் இப்போதெல்லாம் எனக்கு வாய்ஸ் இல்லை என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் புகார் வைத்ததாக செய்திகள் வந்தது.
என்ன நடந்தது
அதன்பின் அதிமுக பிரச்சனை பெரிதானது முத்தலாக் விவகாரத்தில்தான். முத்தலாக் தடை சட்ட மசோதாவை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி முன்னாள் அதிமுக எம்பி அன்வர் ராஜா வரை எதிர்த்துக் கொண்டுதான் இருந்தனர். ஆனால் அதிமுகவின் புதிய எம்பி துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் அம்மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து லோக்சபாவை அதிர வைத்தார்.
என்ன மறுப்பு
இதுகுறித்து கருத்து கூற அதிமுக தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனர். அமைச்சர் ஜெயக்குமார் ரவிந்திரநாத் பற்றி பேச முடியாது என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அதேபோல் முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் கண்டிப்பாக எதிர்ப்போம் என்று ஜெயக்குமார் குறிப்பிட்டார். இதனால் அதிமுகவில் நிலவும் குழப்பம் வெளியே தெரிய துவங்கியது.
அடுத்து என்ன
அதற்கு அடுத்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரின் குட்கா ஊழல் வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டது. மாதவ்ராவ், சீனிவாச ராவ் இருவரின் சொத்துக்களும் நேற்று முடக்கப்பட்டது. இந்த வழக்கை மீண்டும் சிபிஐ கையில் எடுப்பதற்கு பின் ஓ.பன்னீர்செல்வமின் அழுத்தம் இருக்கிறதா என்றும் அதிமுக வட்டாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.
விஸ்வரூபம்
இதெல்லாம் போக இன்று முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள். வெளிநடப்பு செய்துள்ளனர். அரசியல் சட்டத்திற்கு எதிராக முத்தலாக் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கடுமையாக பேசினார்.
மொத்தமாக தெரிந்தது
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருக்கும் நவநீதகிருஷ்ணன் முத்தலாக் மசோதாவை எதிர்த்துள்ளார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதே மசோதாவை ஆதரித்துள்ளார். இதனால் அதிமுகவிற்குள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே நிழல் யுத்தம் நடக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சிக்குள் அடுத்து யார் என்ன மாதிரியான காயை நகர்த்தி, யாருக்கு செக் வைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.