‛அழுகை’.. காங்கிரஸிடம் சீட் கேட்டு கண்கலங்கிய மக்கள் ராஜன்..ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உருக்கம்
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் மறைந்த நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடலாம் என கூறப்படும் நிலையில் வாய்ப்பு கேட்டு ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் சட்டென கண்கலங்கி கண்ணீர் வடித்து அழுத உருக்கமான சம்பவம் நடந்ததுள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்தவர் திருமகன் ஈவெரா. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும், மாஜி தமிழக காங்கிரஸ் தலைவராகவும் இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.
இந்நிலையில் தான் திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியானது. அடுத்த 6 மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேர்தல் தேதியை இநு்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் யார்? இன்றும் பரபர ஆலோசனை!
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு
அதன்படி பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடலாம் என கூறப்பட்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
வேட்பார் யார்? காங்கிரஸ் ஆலோசனை
இந்நிலையில் தான் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸ் சார்பில் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் இன்றும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் இன்று 2வது நாளாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சீட் கேட்கும் மக்கள் ராஜன்
இந்த வேளையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு செய்துள்ளார். அதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜனும் போட்டியிட வாய்ப்பு கேட்டு சென்னையில் முகாமிட்டுள்ளார். அவரும் தினேஷ் குண்டுராவை சந்தித்து வாய்ப்பு கோரியுள்ளார். இதுபற்றி பரிசீலனை நடத்தி வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளது.
கண்கலங்கிய மக்கள் ராஜன்
இதையடுத்து மக்கள் ராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதல் முறையாக சத்திய மூர்த்தி பவனில் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்வை சந்தித்ததில் மகிழ்ச்சி. திருமகன் ஈ வே ரா எதிர்பாராத விதமாக இறந்தது வருத்தம். காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் இடம் அளித்ததற்கு திமுகவிற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி. எனக்கு கட்டாயமாக வேட்பாளராக போட்டியிட இடம் வேண்டும் என்று கேட்டுள்ளேன். காங்கிரசை வளர்க்க நான் நிறைய இழந்துள்ளேன். நான் கட்சிக்கு வேலை செய்யவில்லை என்று யாராலும் என்னை சொல்ல முடியாது. எனக்கு தாய் தந்தை இருவரும் கிடையாது என கண் கலங்கி நான் கடினமாக இந்த காங்கிரஸ் கட்சிக்காக உழைத்துள்ளேன்'' எனக்கூறி கண்கலங்கினார்.
உழைத்தவர்களுக்கு இடம்
மேலும் அவர் பேசுகையில், ‛‛ தாய், தந்தை இல்லாத நிலையில் நான் என்னை காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்து கொண்டு செயல்பட்டு வருகிறேன். நான் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறேன். இதனால் தான் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவிடம் தொகுதி வேண்டும் என்று கேட்டுள்ளேன். கண்டிப்பாக இதனை கட்சி மேலிடம் நிச்சயமாக பரிசீலனை செய்யும். உழைத்தவர்களுக்கு கண்டிப்பாக இடம் அளிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். கண்டிப்பாக செய்வார்கள் என்று நம்புகிறேன்'' என்றார்.