கொங்கில் சமகவிற்கு பங்கு இருக்கு.. ஈரோடு கிழக்கு எங்களுக்கே! மாலையே அறிவிப்பு: சரவெடியாய் சரத்குமார்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுமா? என்பது குறித்த முடிவு இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் கொங்கு மண்டலத்தில் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஆதரவு உள்ளதாகவும் சரத்குமார் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஆளும் தி.மு.க. தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே இந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணி தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கியிருக்கிறது.
ஆன்லைன் ரம்மி: அரசு தடை சட்டம் இயற்றி இருந்தால் நான் நடித்திருக்கவே மாட்டேன்.. சரத்குமார் ஒரே போடு
அதிமுகவின் இரு அணிகளும் போட்டி
அதிமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இந்த முறை அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது. இதன்படி, அதிமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஓ பன்னீர் செல்வமும் அதிமுக சார்பாக வேட்பாளர் நிறுத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார். இதனால், அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
களத்தில் யார் யார் போட்டி
நாம் தமிழர் கட்சி, தேமுதிக என இப்போதைக்கு 4 முனை போட்டி நிலவுகிறது. டிடிவி தினகரன் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. அதேபோல், மக்கள் நீதி மய்யம் இன்னமும் தனது நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை. பாஜக தனது நிலைப்பாட்டை தெளிவாக இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் நேற்று பேட்டி அளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டில் பாஜக இருப்பதை போலவே சூசகமாக குறிப்பிட்டார். ஈரோடு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.
சரத்குமாரின் சமக போட்டியா?
இந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இடைத்தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒருவாரத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. அதற்குள் என்ன பண்ணமுடியும் என்று ஆலோசிக்கவே ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள் வருகை தந்து இருக்கிறார்கள்.
நல்ல வரவேற்பு இருந்தது
சென்ற முறை மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து இந்த தேர்தலை சந்தித்து இருந்தோம். மக்கள் நீதி மய்யம் அப்போது 10,005 வாக்குகள் வாங்கியது. இதில் எங்களது பங்கீடு எவ்வாறு இருந்து இருக்கும் என்று தெரியும். ஈரோடு பகுதியில் மட்டும் அல்ல.. கொங்கு மண்டலத்தை பொருத்தரை நான் ஒருமுறை பிரசாரத்திற்கு சென்ற போது நல்ல வரவேற்பு இருந்தது. இடைத்தேர்தலில் நின்று கிடைத்த அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. அந்த அனுபவத்தை மீண்டும் பெற வேண்டுமா என்ற கருத்துக்களை பரிமாறுவதற்காகத்தான் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இன்று மாலைக்குள் முடிவு
நிச்சயமாக இன்று மாலைக்குள் எங்கள் முடிவை அறிவித்துவிடுவோம். கட்சியை தொடங்கினால் எல்லா தேர்தலையும் சந்திக்க வேண்டும் என்பது நமது கடமை. மக்களை சந்தித்து வாக்குகளை பெற்று மக்கள் பிரதிநிதியாக இருந்தால்தான் நினைத்ததை செய்ய முடியும். மக்களுக்கு கொடுக்கின்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். ஒரு அரசியல் கட்சிக்கு தேர்தலில் நிற்பது முக்கியமான பணியாகும். காலத்தின் சூழலில் நாம் கூட்டணி வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது. இந்த தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். அவர்கள் நிற்கிறோம் என்று சொன்னால் நாங்கள் போட்டியிடுவதற்கு எந்த ஆட்சேபமும் கிடையாது. பிரசாரம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்