"முதல்வர் வேட்பாளர்".. ஈரோடு கிழக்கால் ஏற்பட்ட ட்விஸ்ட்.. அலர்ட்டான அண்ணாமலை.. இதுதான் சங்கதியா?
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைதேர்தல் என்பது முதல்வர் வேட்பாளருக்கான போட்டிதான். ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின்தான் திமுகவின் 2026 முதல்வர் வேட்பாளர். எதிர் அணியில் 2026ல் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை நிரூபிக்கும் தேர்தலாக இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இருக்க போகிறது, என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் சூடு பிடித்து உள்ளது. அங்கே திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி சார்பாக அதிமுக அணி வேட்பாளர் களமிறக்கப்பட உள்ளார்.
அதேபோல் ஓ பன்னீர்செல்வம் சார்பாக அவரது ஆதரவாளரும் களமிறக்கப்பட உள்ளார். இதெல்லாம் போக பாஜகவும் இங்கே போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனைகளை செய்து வருகிறது. இந்த பல முனை போட்டி காரணமாக ஈரோடு கிழக்கு தேர்தல் சூடு பிடித்து உள்ள நிலையில், இந்த தேர்தல் பற்றி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூபிற்கு பேட்டி அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி.. முதல்வர் அறிவிப்பு
பேட்டி
அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த ஈரோடு கிழக்கு சட்டசபை இடைதேர்தல் என்பது முதல்வர் வேட்பாளருக்கான போட்டிதான். ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின்தான் திமுகவின் 2026 முதல்வர் வேட்பாளர். எதிர் அணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை நிரூபிக்கும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் இருக்க போகிறது. எடப்பாடியா? ஓ பன்னீர்செல்வமா? யார் ஆளுமை மிக்கவர்கள் என்பதை காட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்க போகிறது. இதை வைத்தே 2026ல் அவர்களின் எதிர்காலம் என்ன என்று தெரியும். எடப்பாடி இந்த இடைத்தேர்தல் மூலம் திமுகவிற்கு தான்தான் மாற்று என்று காட்ட திட்டமிட்டு இருந்தார். அதை தடுக்கும் விதமாக தற்போது ஓ பன்னீர்செல்வமும் கால் பதித்து உள்ளார்.
ரவீந்திரன் துரைசாமி
ஓ பன்னீர்செல்வம் இப்படி எல்லாம் செய்ய மாட்டார் என்று பலர் சொன்னார்கள். ஆனால் இப்போது ஓ பன்னீர்செல்வம் கொங்கு மண்டலத்தில் கால் பதித்து உள்ளார். இப்போது ஓ பன்னீர்செல்வத்தை பார்த்து பதறுகிறார்கள். பன்னீர்செல்வத்திற்கு ஒரு வாக்கு வங்கி உள்ளது. அவர் இப்போது துணிச்சலாக ஈரோடு கிழக்கில் கால் பதித்து உள்ளார். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். ஒன்றாக இருந்து கூட்டணியை கட்டமைத்து திமுகவை அதிமுக எதிர்க்க வேண்டும். ஆனால் ஓ பன்னீர்செல்வத்தையும், பாஜகவையும் எடப்பாடி ஒதுக்கிவிட்டார்.
அபகரிக்க வேண்டும்
தனியாக இருந்து அனைத்தையும் அபகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பார்க்கிறார். அது அவரால் முடியாது. பன்னீர்செல்வமும் பதிலடியை கொடுக்க தொடங்கி உள்ளார்.ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிடுமா என்பது தெரியாது. பாஜகவிற்கு வெள்ளாள கவுண்டர்கள் வாக்குகள் இதனால் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அண்ணாமலையை வெள்ளாள கவுண்டர்கள் பெரிய தலைவராக கருத தொடங்கி உள்ளனர். அண்ணாமலையும் இதில் அலர்ட்டாக இருக்கிறார். ஈரோடு கிழக்கில் 34 வார்டு வரை இருக்கிறது. இங்கே வெள்ளாள கவுண்டர்களின் வாக்குகளை பெறுவதே அண்ணாமலையின் பிளானாக, அசைன்மெண்ட்டாக இருக்கும்.
ஓ பன்னீர்செல்வம்
அங்கே மக்கள் இடையே அண்ணாமலைக்கு மதிப்பு உள்ளது. இதனால் பாஜக என்ன முடிவு எடுக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஓ பன்னீர்செல்வத்தின் செயலால் எடப்பாடி பழனிசாமி டீம் பாஜக அலுவலகத்தில் போய் நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தனியாக இருக்க வேண்டும் என்று, தனியாக நிரூபிக்க வேண்டும் என்று இருந்த எடப்பாடி பழனிசாமி இப்போது பாஜக அலுவலகத்திற்கு ஆட்களை அனுப்பி உள்ளனர். பாஜகவை எதிர்க்க அதிமுக தலைவர்களே இப்போது பாஜக அலுவலகத்தில் போய் இருக்கிறார்கள், என்று ரவீந்திரன் துரைசாமி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.