ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..அரசு ஊழியர்கள் வாக்குகள்..திமுகவிற்கு நிச்சயம் கிடைக்கும்..அன்பில் மகேஷ்
அரசு ஊழியர்களின் வாக்குகள் திமுகவிற்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியுள்ளதால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுகவிற்கு வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை கடற்கரை சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்க அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "சென்னையில் ஜி-20 கல்வி கருத்தரங்கில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொள்ளும்போது, தேசிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசுக்கு இருக்கக்கூடிய ஆட்சேபனைகள் குறித்து அவரிடம் தெரிவிக்கப்படும்.
தமிழ்நாடு முதல்வருடன் கலந்து ஆலோசனை செய்து மத்திய கல்வி அமைச்சரை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கத்தில் மதுரையில் கட்டப்பட்ட வரும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் விரைவில் திறக்கப்படும்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஆதரவு கிடைக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த அன்பில் மகேஷ், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதி சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளதாகவும், இதர கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி திமுக அரசு நிறைவேற்றியுள்ளதால் வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ஆம் தேதி தொடங்க உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணிக்குழுவை அறிவித்து திமுக பிரச்சாரத்தை தொடங்கி விட்டது.
சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாமல் உள்ளதால் மக்களின் அதிருப்தி நிலவுவதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே இடைத்தேர்தலில் வெற்றி தங்களுக்கே கிடைக்கும் என்று அதிமுக கூறி வருகிறது. அதிமுக பிளவு பட்டுள்ளது திமுகவிற்கு சாதகமாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர். எனவேதான் தங்களுக்கு அரசு ஊழியர்கள் வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்று கூறியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.