பாஜக கூட்டணிக்கு அதிமுக இபிஎஸ் அணி குட்பை? அண்ணாமலை சந்திப்பு வேஸ்ட்? வெளுத்து கட்டிய பொன்னையன்!
சென்னை: உள்ளாட்சி தேர்தலிலேயே அதிமுக- பாஜக கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது; பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கிறதா? என்ற கேள்விக்கு பொருளே இல்லை என அதிமுக இபிஎஸ் அணியின் மூத்த தலைவர் பொன்னையன் கடுமையாக கூறியுள்ளார். அதிமுக இபிஎஸ் அணி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்த சிறிதுநேரத்திலேயே இதனை பொன்னையன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
சென்னையில் இன்று அதிமுக இபிஎஸ் அணி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அதிமுக ஓபிஎஸ் அணி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புகள் முடிந்த சிறிது நேரத்திலேயே அதிமுக இபிஎஸ் அணியின் மூத்த தலைவர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் பொன்னையன் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலிலேயே பாஜக தனித்துதான் போட்டியிட்டது. உள்ளாட்சி தேர்தலுடன் பாஜகவுடனான கூட்டணி ,முடிவுக்கு வந்துவிட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிய்ல் அதிமுக நீடிக்கிறதா? என்ற கேள்விக்கு பொருளே இல்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்:எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு
பாஜக விவகாரத்தில் நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்போம். வட மாநிலங்களில் பாஜக தங்களது நட்பு சக்திகளின் ஆட்சியை எப்படி எல்லாம் கவிழ்த்தது என்பது எங்களுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும். வடமாநிலங்களின் நட்பு கட்சிகளின் ஆட்சிகளை வீழ்த்தியது பாஜக. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைக்குமா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு பொன்னையன் கூறினார்.
சென்னை அண்ணா நினைவிடத்தில் பொன்னையன் அளித்த பேட்டி விவரம்: இபிஎஸ் தலைமையிலே உள்ள இந்த பேரியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்துவது அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆவி. அந்த அடிப்படையில் ஒன்றரை கோடி தொண்டர்களும் 94.5% பொதுக்குழு உறுப்பினர்களும் தமிழகத்து மக்களும் இபிஎஸ் பின்னால், எடப்பாடியார் பின்னால் இயங்குகிறார்கள். செயல்படுகிறார்கள். தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரையில் சட்ட ரீதியாக சில கடமைகள் உண்டு. ஒரு அரசியல் கட்சியின் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை கண்காணிக்க வேண்டியது நீதிமன்றம் அல்ல சட்ட ரீதியாக. அந்த வகையில் அதிமுகவின் பிரச்சனைகளை ஆழமாகப் பார்த்து, சட்டத்துக்குட்பட்டு அந்தந்த கட்சிகளின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதுதான் தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால் தேர்தல் ஆணையம் ஆரம்பத்தில் கோட்டை விட்டுவிட்டது. இப்போது நீதிமன்றத்தை கைகாட்டுவது சட்டத்தை மீறிய செயல். உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ்ஸை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது என போட்டிருக்கும் மனு சட்டத்துக்கு புறம்பானது. அதை நீதிமன்றம் சரி செய்யும். எடப்பாடிக்கு ஆதரவாக எல்லாமே நடக்கும்.
இபிஎஸ் தலைமையிலான அண்ணா திமுகவை அங்கீகரித்து ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. இப்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இன்றைக்கும் வரை ஓபிஎஸ் தடை வாங்கவில்லையே.
பாஜக வடநாட்டிலே எப்படிப்பட்ட செயல்பாடுகளை எல்லாம் செய்தது? பாஜகவின் நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன? அந்த ஆட்சிகளை எல்லாம் எப்படி எல்லாம் பாஜக பிடித்தது? என்பது உங்களுக்கும் தெரியும்; மக்களுக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். நாங்கள் எச்சரிக்கையாக இருப்போம்.
உள்ளாட்சித் தேர்தலிலேயே பாஜக தனியாகத்தானே நின்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கிறதா? என்ற கேள்விக்கே பொருள் இல்லை. மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர். மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்ற காரணத்தால் பாஜகவும் எங்களோடு இருக்கலாம் அல்லவா? எங்களை விரும்பலாம் அல்லவா? எங்களுக்காக பணியாற்றலாம் அல்லவா? காத்திருந்து பாருங்கள்.
திமுக நீங்கலாக அனைத்து கட்சிகளும் எங்களுடன் வந்தால் வரவேற்போம். ஓபிஎஸ்-க்கு கட்சியே இல்லை. ஓபிஎஸ் ஒரு செல்லாக்காசு. சட்டம், ஓபிஎஸ்ஸை ஏற்காது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தெளிவாக இபிஎஸ் அணியை அங்கீகரித்துவிட்டது. அதற்கு மேல் எதுவும் இல்லை. இவ்வாறு பொன்னையன் கூறினார்.