விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும் நிலையில் 2 கட்சிகளின் தலைவர்கள் டிடிவி தினகரனை சந்தித்து நேரில் ஆதரவு கோரியுள்ளது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து களமிறங்கி உள்ளது. வேட்பாளராக சிவபிரசாந்த களமிறங்கி பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில் தான் அக்கட்சிக்கு 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உற்சாகமடைந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா காலமானார். இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா, அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தென்னரசு, ஓ பன்னீர் செல்வம் சார்பில் செந்தில் முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நான் கிரிக்கெட் வீரர்! பவுலர்களை பார்த்து பயந்தால் வேலைக்கு ஆகுமா! அமமுக வேட்பாளர் சிவபிரசாத் பளிச்!
அமமுக தனித்து போட்டி
இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 29 வயது நிரம்பிய சிவபிரசாந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
தேர்தல் பணிக்குழு
மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளரும், திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான, முன்னாள் அமைச்சர் சண்முகவேலு தலைமையில் செயல்பட உள்ளது. மொத்தம் 294 பேர் இடம்பெற்றுள்ளனர். தற்போது தேர்தல் பணிக்குழுவினரும் பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.
2 கட்சிகள் ஆதரவு
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தற்போது 2 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி ஆகியவை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு இடைத்தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளன.
டிடிவி தினகரன் சந்திப்பு
அதன்படி தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கணேசன் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவனத்தலைவர் விஎம்எஸ் முஸ்தபா ஆகியோர் இன்று சென்னையில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் டிடிவி தினகரனை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதாக கூறினர்.