ஈரோடு கிழக்கு முக்கியமான இடைத்தேர்தல்..போட்டியிடும் வேட்பாளர் யார்.. ஜி.கே.வாசன் சூசக தகவல்
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளதால் எங்களின் கூட்டணியின் வெற்றிக்கு சாதகமாக இருக்கும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கூட்டணி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர் யார் என்று ஓரிரு நாளில் அறிவிப்போம் என்றும் ஜி.கே,வாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி, காலியிடம் ஏற்பட்ட சட்டமன்ற தொகுதியில் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனையடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, அந்த மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட முடியாது. அங்கு பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பொருட்கள், பணம் கொண்டு செல்லும் போது பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு நகராட்சி ஆணையர் சிவகுமார், தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு கூறியுள்ளார்.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் தமாகவிற்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67,300 ஓட்டுக்கள் பெற்ற நிலையில் தமாக வேட்பாளர் யுவராஜா 58,396 ஓட்டுக்கள் பெற்றார். சுமார் 8,904 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசப்பட்டது. இருப்பினும் அந்த தேர்தலில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். தற்போது இரட்டை இலை சின்னத்திற்கு சிக்கல் ஏற்படலாம் என கூறப்படும் நிலையில் தான் தமாகாவிற்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அவர் புது சின்னத்தில்தான் போட்டியிட்டாக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இன்று காலை 11 மணிக்கு தமாகா அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசனை, அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஜெயக்குமார், வளர்மதி ஆகியோர் சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் யார் போட்டியிடலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே சுமூகமான உறவு ஏற்பட்டு வருகிறது. எடப்பாடிபழனிச்சாமியிடம் ஏற்கனவே நான் ஆலோசனை மேற்கொண்டேன். அதிமுக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். எங்களின் இலக்கு உறுதியாக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதிமுக, தமாகா, பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் மக்கள் மனநிலையை பிரதிபலிக்காத ஆட்சியாக உள்ளது.
இந்த ஆட்சி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வில்லை. வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாதது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். கூட்டணியில் யார் வேட்பாளர் என்று ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.