"அடியே மீனாட்சி உனக்கெதுக்கடி வைர மூக்குத்தி.. சொன்னது யாரு".. ஸ்டாலினை விடாமல் வாரும் எச்.ராஜா
இந்து கோயில்களை நிர்வகிக்க தனி வாரியம் தேவை என எச் ராஜா தெரிவித்துள்ளார்
சென்னை: "அடியே மீனாட்சி உனக்கெதுக்கடி வைர மூக்குத்தி? கழட்டடி கள்ளி" என்று அண்ணாதுரை பேசியதை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை ஸ்டாலினுக்கு நினைவுபடுத்துகிறேன். உங்களை போன்ற மதசார்பற்ற அரசுக்கு மத வழிபாட்டு தலத்தில் என்ன வேலைன்னு கேட்கிறேன் நான்... தமிழகத்தில் ஹிந்து கோவிலுக்கென்று தனி வாரியம் அமைத்து நிர்வகிக்க வேண்டும்" என்று எச்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசிய செயலாளருமான எச்.ராஜா ட்வீட் ஒன்றினை பதிவிட்டு, அத்துடன் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதன் சுருக்கம் இதுதான்:
ஆன்மீக வளர்ச்சிக்காக நம் முன்னோர்கள், மா மன்னர்கள் கட்டி பாதுகாத்த கோயில்களையும், அதன் சொத்துக்களையும், நாசப்படுத்தியதே இந்த திக, திமுக கும்பல்தான்.. இதுல சந்தேகமே வேண்டாம்.
இந்து கோயில்கள்
ஏனென்றால், தமிழகத்தில் 44 ஆயிரம் கோயில்கள் அறநிலையத்துறையினரிடம் உள்ளது.. 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நஞ்சை புஞ்சை மானாவாரி நிலங்கள் உள்ளன.. 22 ஆயிரத்து 600 கட்டிங்கள் உள்ளன.. 33 ஆயிரத்து 600 மனைக்கட்டுகள், அதன் விஸ்தீரணங்கள் 28 கோடி சதுர அடி உள்ளன. இன்னைக்கு இந்த சொத்துக்கள் பூராவும் இந்த திராவிட கட்சிகளின் குண்டர்களால் பல இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.. அவர்கள் கையில் இருக்கு..
கடைகள்
இதுக்கு அறநிலையத்துறை சட்டத்தின்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதன் மார்க்கெட் மதிப்பின்படி வாடகை வசூல் பண்ணணும்? எங்கியாவது நடந்திருக்கா? குத்தகை வாங்கியிருக்காங்களா? கோயில்கள் ஒழுங்கா பராமரிக்கப்பட்டிருக்கா? திருவண்ணாமலை, இடுமனார்கோயில், இளையனார்கோயில் போன்ற கோயில்கள் இன்று கடைகளாக மாறிடுச்சு.. கர்ப்ப கிரகத்துல கடை வெச்சிருக்காங்க.
சீரழிவு
அவ்வளவு பெரிய சீரழிவுக்கு தலைமை தாங்கிய திமுகவின் தலைவர் முகஸ்டாலின், என்னவோ பாரம்பரியத்தை இவர் காப்பாத்த போறாராமே? இந்து விரோத, பாரம்பரிய விரோத, தமிழ் பாரம்பரிய கலாச்சாரத்தின் எதிரி திமுக, இந்த பாரம்பரியத்தை காப்பாத்துமா?
மீனாட்சி
"அடியே மீனாட்சி உனக்கெதுக்கடி வைர மூக்குத்தி? கழட்டடி கள்ளி" என்று அண்ணாதுரை பேசியதை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை ஸ்டாலினுக்கு நினைவுபடுத்துகிறேன். நீஙகள் எங்கள் இந்து கலாச்சார மையங்களை, கோயில்களை அழித்தவர்கள்.. இந்து கோயில்களின் நிர்வாகமானது, தமிழகத்தில் ஹிந்து கோவிலுக்கென்று தனி வாரியம் அமைத்து நிர்வகிக்க வேண்டும்.
வக்பு வாரியம்
வாரியத்திடம் விட வேண்டும்.. அப்படிதானே வக்பு போர்டு இருக்கு? உங்களை போன்ற மதசார்பற்ற அரசுக்கு மத வழிபாட்டு தலத்தில் என்ன வேலைன்னு கேட்கிறேன் நான்... ஆக திமுகவின் நச்சுப்பாம்பு தலை முன்னெடுத்து காட்டுகிறது.. இந்து கோயில்களை அழிப்பதற்காக.. நிச்சயமாக இவர்களை தோலுரித்து காட்டுவோம்.. இந்து கோயில்களை மீட்க வீதிக்கு வர வேண்டிய நேரம் இது" என்றார்.