ஆனானப்பட்ட கிங் மேக்கர் காமராஜரே.. காங்கிரசில் தேர்தல் சவாலை சந்தித்து ஜெயித்தவர்தான்! ஒரு ரீவைண்ட்
சென்னை: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சசி தரூர், மல்லிகார்ஜுனே கார்கே, திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் சசிதரூருக்கும், மல்லிகார்ஜுனே கார்கேவுக்கும் இடையே தான் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் நடைபெறும் வாக்குப்பெட்டி அரசியல் ஒன்றும் இப்போது புதிதல்ல, சத்தியமூர்த்தி, காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்த காலத்திலேயே இது போன்ற நடைமுறைகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அது தொடர்பான விவரத்தை பார்க்கலாம்;
காங்கிரஸ் கட்சி
தமிழக முதலமைச்சராக காமராஜர் பதவியேற்பதற்கு முன்னர் 1940 முதல் 1954 வரையிலான காலகட்டங்களில் பல்வேறு சவால்களையும், போட்டிகளையும் எதிர்கொண்டார் காமராஜர். காமராஜரின் அரசியல் குருவும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சளர்களில் ஒருவருமாக திகழ்ந்த சத்தியமூர்த்தி 1936ஆம் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தலில் முத்துரங்க முதலியாரிடம் தோல்வியை சந்தித்தார். ஆனால் முத்துரங்க முதலியார் பெயர் வரலாற்றில் நிலைக்கவில்லை, சத்தியமூர்த்தியின் பெயர் வரலாற்றில் நிலைத்துவிட்டது. இன்று சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவன் என்று தான் அழைக்கப்படுகிறது.
ஓமந்தூரர் ராமசாமி
இதே போல் 1939 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலிலும் சத்திய மூர்த்தி மீண்டும் தோல்வி அடைந்தார். இந்த முறை சத்தியமூர்த்தியை வீழ்த்தி வெற்றி பெற்றது ஓமந்தூரர் ராமசாமி ரெட்டியார். சத்தியமூர்த்தி 90 வாக்குகளை பெற்ற நிலையில் ஓமந்தூரர் ராமசாமி ரெட்டியார் 125 வாக்குகள் பெற்றார். சத்தியமூர்த்தி இப்படி தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையிலும் காங்கிரஸ் கட்சியில் அவருக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் எள்ளளவும் குறையவில்லை. தாம் விட்ட இடத்தை தமது சீடரை வைத்து பிடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிய சத்தியமூர்த்தி 1940ஆம் ஆண்டு தி.நகர் இந்தி பிரச்சார சபை வளாகத்தில் நடைபெற்ற தேர்தலில் கோவை சுப்பையாவை வீழ்த்தி காமராஜர் வெற்றிபெற்றார்.
முதலமைச்சர் பதவி
1954ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜாஜி விலகிய போது, அந்த இடத்தை கைப்பற்றுவதற்கும் தமிழக காங்கிரஸில் பெரும் போட்டியே நடந்தது. சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு காமராஜரை எதிர்த்து சி.சுப்ரமணியம் போட்டியிட்டார். இதில் விஷேஷம் என்னவென்றால் எந்த சி.சுப்பிரமணியம் தன்னை எதிர்த்து போட்டியிட்டாரோ அதே சுப்பிரமணியத்துக்கு தனது அமைச்சரவையில் காமராஜர் இடம் கொடுத்தது தான். காமராஜரை வரதராஜுலு நாயுடுவும், சி.சுப்பிரமணியத்தை பக்தவத்சலமும் ஆதரித்தனர் என்பது தனிக்கதை.
பக்தவத்சலம் முதல்வர்
1963ஆம் ஆண்டு கே-பிளான் திட்டத்தின் அடிப்படையில் காமராஜர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய போது அப்போதும் அந்தப் பதவியை கைப்பற்ற தமிழக காங்கிரஸில் கடும் போட்டி நிலவியது. ராஜாஜி ஹாலில் நடைபெற்ற அந்த தேர்தலுக்கு டெல்லியிலிருந்து இந்திரா காந்தியே பார்வையாளராக சென்னை வந்திருந்தார். பக்தவத்சலத்தை எதிர்த்து சுவாமிநாதன் களம் கண்டார். 128 வாக்குகள் பெற்று பக்தவத்சலம் வெற்றிபெற்றதால் முதல்வர் பதவி அவர் வசம் சென்றது. காமராஜர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுப்பிரமணியத்தை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டது போல் பக்தவத்சலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுவாமிநாதனை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவில்லை.
ஒன்றும் புதிதல்ல
இதனால் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டிப் பூசல் உச்சக்கட்டம் அடைந்தது. 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை திமுகவிடம் பறிகொடுத்துவிட்டு காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. இதனால் காங்கிரஸ் கட்சியில் நடைபெறும் வாக்குப்பெட்டி அரசியல் ஒன்றும் இப்போது புதிதல்ல என்பது கவனிக்கத்தக்கது.