கோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது
சென்னை: கோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.. இது தொடர்பாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
அது எந்த ஊர், எந்த தெரு என்பது குறித்து ஆராய்ச்சி வேண்டாம்.. ஏனெனில் சொல்லப்போகும் விஷயமே வேறு. தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஆக்கிரமிப்பு இருக்கிறது. ஏன் ஒவ்வொரு தெருவிலுமே ஆக்கிரமிப்பு இருக்கிறது. இதை இல்லை என்று யாரும் மறுக்க முடியாது.
சிலர் படிக்கட்டுகளை வீட்டிற்கு வெளியே பாதையில் வைத்து ஆக்கிரமித்து இருப்பார்கள். இதை பார்க்கும் பக்கத்து வீட்டுக்காரர். தனது வீட்டு கம்பவுண்ட் சுவரை பாதையை ஆக்கிரமித்து கட்டியிருப்பார். இன்னொருவர் தனது வீட்டிற்கு முன்புறம் உள்ள பகுதியில் கார்கள், வாகனங்கள் சென்று வரும் வகையில் பாதையை மேடாக்கி இருப்பார். வீட்டின் முன் சிலர் சாக்கடைகளை ஆக்கிரமித்து அதன் மேல் வாகன நிறுத்தம் வைத்திருப்பார்கள். இவை எல்லாம் சர்வசாதாரணம்.
சாலைகளில்
ஆக்கிரமிப்புகள் தெருக்களில் இப்படி என்றால் சாலைகளில் இதைவிட வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் அந்த இடங்களை ஆக்கிரமித்து கடையே கட்டியிருப்பார்கள். அந்த இடம் தங்களுடையது என்று கூறி, அப்பாவி மக்களிடம் வாடகை வாங்கி, அதை ஆண்டு ஆண்டுகாலமாக அனுபவித்தும் வருகிறார்கள்.
சரியாக தவறான
ஒருவருக்கு சொந்தமான இடத்தின் முன் உள்ள புறம்போக்கு இடம். அந்த நபருக்கு சொந்தமான இடமாகவே பாவிக்கப்படுகிறது. அதை முழுமையாக அனுபவிக்கிறார். இது தவறா, சரியா என்ற கேள்விகள் இப்போது எழுப்புவது நோக்கம் அல்ல.
நிலங்கள் ஆக்கிரமிப்பு
ஏனெனில் அரசியல் கட்சியினர் தாங்கள் விரும்பும் அத்தனை புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்து அதற்கு பட்டாக்களை அரசு அதிகாரிகளின் உதவியுடன் வாங்கி அதை பின்னாளில் பணக்கார நடுத்தர வர்கத்திற்கு பிளாட்டு போட்டும் விறறுள்ளார்கள். அதற்கு வங்கிகள் லோன் கொடுத்தும் உள்ளன. சென்னையில் மட்டும் எத்தனை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் எத்தனை நிலங்கள் என்று பட்டியல் எடுத்தால் தலை சுற்றிவிடும்.
ஆக்கிரமிப்பு அதிகம்
இங்கே ஆக்கிரமிப்பு என்பது அவரவருக்கு உள்ள செல்வாக்கை பொறுத்து கொஞ்சமாகவோ அதிகமாகவோ இருக்கிறது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் நினைத்தால் தமிழகத்தில் ஒரு தெரு விடாமல் அத்தனை தெருக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும். அந்த அளவிற்கு ஆக்கிரமிப்புகள் அதிகமாகவே உள்ளன.
என்ன தீர்வு
ஆக்கிரமிப்பவர்களால் சாலைகளில் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சாக்கடை வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை அமைக்கும் போது அங்கு மக்கள் மிகவும் சிரமத்தை சந்திக்கும் நிலையும் உருவாகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதும் நடக்கிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமித்து இருந்தால் பட்டாக்களும் கிடைத்துவிடுகிறது என்பதால்,... தப்பை சரியாக செய்பவர்களுக்கு தரும் வெகுமதி போல் காலம் காலம் ஆக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு தீர்வு ஒன்று தான்... மக்களாய் பார்த்து மனத்தை மாற்றிக்கொண்டால் தான் உண்டு. மற்றபடி வாய்பே இல்லை.