புது வார்னிங்.. டெஸ்டில் நெகட்டிவ் வந்தாலும் கொரோனா இருக்கலாம்.. அறிகுறியை வைத்து சிகிச்சை அவசியம்
சென்னை: கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தாலும், அறிகுறிகள் இருந்தால், கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 80 வயது நபருக்கு பல பரிசோதனையில் நெகட்டிவ் காட்டிய பிறகும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே, அதன் செயல்பாடு குறித்து இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியாத நிலையில் விஞ்ஞானிகள் உள்ளனர்.
கொரோனா பரிசோதனைகள் நெகட்டிவ் என வந்தாலும், உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
24 மணி நேரத்தில் 230,370 கேஸ்கள்.. உலகை உலுக்கிய கொரோனா வைரஸ்.. உலக சுகாதார மையம் எச்சரிக்கை!
முதியவர்
80 வயதான நோயாளி ஒருவருக்கு நேர்ந்த அனுபவம் இதற்கு உதாரணம். பலமுறை பரிசோதித்தும், அவருக்கு நெகட்டிவ் என வந்தது. வறட்டு இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை இருந்தன. இதையடுத்து சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது கொரோனா இருப்பதாக அறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கு கூட முதல்கட்ட சோதனைகளில் கொரோனா கண்டறியப்படவில்லை. ஆனால் பிறகு உறுதி செய்யப்பட்டது.
பல சோதனைகள்
எய்ம்ஸ் மருத்துவத் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் விஜய் குர்ஜர் இதுபற்றி கூறுகையில், "மார்பு எக்ஸ்ரே மற்றும் சி.டி ஸ்கேன் ஆகியவை வித்தியாசமான ஒரு தொற்றுநோய் இருப்பதை காட்டின. எனவே, கொரோனா டெஸ்ட் மீண்டும் இரண்டு முறை செய்யப்பட்டது. இரண்டு முறையும், அது எதிர்மறையாக மட்டுமே வந்தது. ஆனால் மருத்துவ அறிகுறிகளின் அடிப்படையில் நோயாளிகளை நாங்கள் தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தி வருகிறோம். மேலும் ஒரு ஆன்டிபாடி பரிசோதனைக்கு உத்தரவிட்டோம், "என்று தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்கு அறிகுறி போதும்
குர்ஜார் மேலும் கூறுகையில், நோயாளிகளுக்கு அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சையளிக்க வேண்டும், ஆனால் அறிக்கைகளை வைத்து கிடையாது. ஏனெனில், மருத்துவ பரிசோதனை அறிக்கையை நம்பிக்கொண்டு இருந்தால் நோயாளி உடல்நிலை திடீரென மோசமடையக்கூடும், குறிப்பாக வயதான நோயாளிகள் அல்லது முன்பே வேறு பல நோய்கள் இருப்போருக்கு இது மோசமான விளைவை கொடுத்துவிட கூடும் என்பதால், எச்சரிக்கை அவசியம்.
தவறான முடிவுகள்
கொரோனா வைரஸ் சோதனைகள் தவறாக காண்பிக்க பல காரணங்கள் உள்ளன. முறையற்ற சளி மாதிரி சேகரிப்பு, வைரஸ் சுமை குறைவாக உள்ளது போன்றவை இதற்கு காரணங்கள். ஆர்டி-பி.சி.ஆர் சோதனை மற்றும் ஆன்டிபாடி சோதனை ஆகியவை தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் இரண்டு சோதனை முறைகள் ஆகும்.