ரஜினி அரசியலுக்கு வரட்டும்.. ஆனால் இப்படி பார்க்கத்தான் எல்லோருக்கும் ஆசை.. அமீர்
சென்னை: ரஜினிகாந்தை மதசார்பற்ற மனிதராக பார்க்கத்தான் எல்லோருக்கும் ஆசை; ரஜினி அரசியலுக்கு வரட்டும் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
இன்று கமல்ஹாசனின் ராஜ்கமல் பட நிறுவன அலுவலகத்தில் கே பாலசந்தரின் மார்பளவு சிலை திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினி காந்த் பங்கேற்றார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினி, "பாஜகவில் இணைவது குறித்து பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசவில்லை. அவர் என்னை அழைக்கவும் இல்லை. என்னை பாஜக தலைவர் என்பது போல நிறுவ முயற்சி நடக்கிறது. பாஜகவின் நிறத்தை எனக்கு பூச முயற்சி நடைபெறுகிறது. திருவள்ளுவர் பெரிய ஞானி சித்தர். கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர். திருவள்ளுவர் நாத்திகர் இல்லை.. அவர் ஆத்திகர்.. திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியலாக்குவது தேவையற்ற செயல். திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது, சர்ச்சையாக்குவது தேவையற்றது" என்றார்.
ரஜினியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க. ஸ்டாலின் ஏற்கனவே நிரப்பிவிட்டார்- ரஜினிகாந்துக்கு துரைமுருகன் பதில்
இயக்குனர் அமீர் இதுபற்றி கூறுகையில், ரஜினிகாந்தை மதசார்பற்ற மனிதராக பார்க்கத்தான் எல்லோருக்கும் ஆசை; ரஜினி அரசியலுக்கு வரட்டும்; ஆனால் பாஜக வை முன்னிறுத்தி வர வேண்டாம் என்பது தான் என் ஆசை என்றார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் கூறுகையில், ரஜினி இன்னும் அதிகாரப்பூர்வமாக கட்சி ஆரம்பிக்கவில்லை; அதனால் இது அவர் தனிப்பட்ட கருத்து என்றார்.