இனி காவல்துறையில் எல்லாமே தமிழில் தான் இருக்கணும்.. தமிழக டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு
சென்னை: தமிழகத்தில் காவல்துறை தொடர்பான அறிவிப்புகள், பதிவேடுகள் மற்றும் குறிப்பாணைகள் என அனைத்துமே தமிழில் தான் கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழக டிஜிபி ஜேகே திரிபாதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் மொழி வளர்ச்சித்துறை சார்பாக, தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்த 'ஆட்சிமொழி திட்டச் செயல்பாடு' என்ற ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் தமிழ் மொழி வளர்ச்சித்துறை சில ஆலோசனைகளை வழங்கியது.
இது தொடர்பாக கடந்த 6ஆம் தேதி தமிழ்நாடு காவல் துறைக்கும் தமிழ் மொழி வளர்ச்சித்துறையின் அறிக்கை அனுப்பப்பட்டது. அதன்பிறகு 7ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை தமிழ்நாடு காவல் துறை அதிகாரிகள் தமிழ் மொழியை முழு பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசித்தனர்.
தமிழில் இருக்கணும்
இதையடுத்து, தமிழகத்தில் காவல்துறை தொடர்பான அறிவிப்புகள், பதிவேடுகள் மற்றும் குறிப்பாணைகள் என அனைத்துமே தமிழில் தான் கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழக டிஜிபி ஜேகே திரிபாதி இன்று(திங்கள்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடிதங்கள்
அவர் தனது அறிக்கையில், காவலர்கள் வருகை பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இடுவதுடன், அனைத்து விதமான வரைவு கடிதத் தொடர்புகள் மற்றும் குறிப்பாணைகள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்..
தமிழில் பராமரிக்க
மேலும் இருக்கைகளில் உள்ள தன் பதிவேடு, முன்கொணர்வு பதிவேடு உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளும் தமிழில் பராமரிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பெயர்கள் மாற்றம்
அனைத்து காவல் வாகனங்களிலும் "காவல்" என தமிழில் எழுதுவதுடன் அலுவலக முத்திரைகள் மற்றும் பெயர்ப்பலகைகள் தமிழில் மாற்றப்படவேண்டும் என்றும் தனது அறிக்கையில் திரிபாதி குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழி பதிவுகள் தொடர்பாக அனைத்து காவல்துறை அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்குமாறும் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.