முரளிதரன் படம்...நன்றி வணக்கம்னா.. நன்றி வணக்கம்னு அர்த்தம்.. நக்கலாக பதிலளித்த விஜய்சேதுபதி!
சென்னை: முத்தையா முரளிதரன் பட விவகாரம் குறித்து தாம் நன்றி வணக்கம் என ட்வீட் போட்டதற்கு எல்லாம் முடிந்து போனதாக அர்த்தம் என நடிகர் விஜய்சேதுபதி நக்கலாக பேட்டியளித்துள்ளார்.
ஈழத் தமிழரின் உணர்வுகளை கொச்சைபடுத்தியவர் முத்தையா முரளிதரன் என்பது உலகத் தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு. அத்தகைய முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என உலகத் தமிழர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் இதுபற்றி விஜய்சேதுபதி எதுவும் சொல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தம்முடைய வரலாற்று படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக் கொள்ள வேண்டும் என்று முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.
800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கை
ட்விட்டரில் நன்றி வணக்கம்
இந்த வேண்டுகோள் அறிக்கையை தமது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த விஜய் சேதுபதி, நன்றி வணக்கம் என்று மட்டும் பதிவிட்டிருந்தார். முத்தையா முரளிதரன் படத்தில் தாம் விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் பூடகமாகவே விஜய்சேதுபதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
முதல்வர் எடப்பாடியுடன் சந்திப்பு
இந்த நிலையில் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு இன்று நேரில் சென்றார் நடிகர் விஜய்சேதுபதி. முதல்வரின் தாயார் மறைந்த தவுசாயம்மாள் படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆறுதல் கூறினார் விஜய்சேதுபதி.
நக்கலான பதில்
அப்போது விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்கள், நன்றி வணக்கம் என ட்வீட் போட்டுள்ளதற்கு என்ன அர்த்தம்? படத்தை கைவிட்டுவிட்டீர்களா? விலகிட்டீங்கன்னு எடுத்துக்கலாமா? என கேள்விகள் கேட்டனர். இந்த கேள்விகளுக்கு, நன்றி வணக்கம்னு அர்த்தம் என நக்கலாக பதில் சொன்னார் விஜய் சேதுபதி. மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் கேட்டபோது, எல்லாம் முடிந்து போனது என அர்த்தம். இனி அதைப்பற்றி பேசவேண்டாம் என்று கூறினார்.
வேண்டா வெறுப்பாக விலகலா?
விஜய் சேதுபதியின் இந்த பதில் தொனியானது பொதுமக்கள், அரசியல் கட்சிகள், ஈழத் தமிழர்கள் கோரிக்கை விடுத்த போதும் முத்தையா முரளிதரனே சொன்னதால் வேண்டா வெறுப்பாக படத்தில் இருந்து விலகியதாகவே இருந்தது. இந்த போக்கைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் சுட்டிக்காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.