பேனா பிடிக்கும் கையால் தடியை பிடிக்க தயார்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தடாலடி
சென்னை: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேனாவை பிடித்து கையெழுத்திடும் கையால் தடியை பிடிக்கவும் தயார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலந்தூரில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த அவர் இந்த தடாலடி கருத்தை செய்தியார்களிடம் கூறினார். மேலும், குடியுரிமை சட்டத்தை தமிழர்கள் யாரும் ஆதரிக்கமாட்டார்கள் என்றும், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் சகோதரத்துவத்துடன் தமிழகத்தில் பழகி வருவதாகவும் தெரிவித்தார். இதனால் குடியுரிமை சட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் அதற்கு ஆதரவு கிடைக்காது என்பது தான் உண்மை நிலை என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் சார்பாக ஒரு வாரத்திற்கு கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் நிலையில், வெறுமனே கையெழுத்து இயக்கம் தானே என அலட்சியம் கொள்ள வேண்டாம் என்றும், பேனாவை பிடித்து இன்று கையொப்பம் போடும் கைகள் தடியை பிடிக்கவும் தயங்காது, பிடிக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் செயல்பாடுகளை பற்றி விமர்சித்த அவர் பட்ஜெட் யாருக்கும் பயனளிக்காத ஒன்று எனவும் விமர்சித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் கலந்துகொண்டார்.
தமிழர்கள் யாரையும் பிரித்து பார்க்காதவர்கள் என்றும், வன்முறையால் தான் குடியுரிமை சட்டத்தை திருத்த முடியும் என்றால் அதற்கும் தயங்கமாட்டோம் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பொறுத்தவரை சற்று தடாலடி கருத்துக்களை கூறுவது அவரது வழக்கம்.