யார் வேண்டுமானாலும் தலைவராகலாம்.. ஆனால் இளங்கோவன் மட்டும்.. திருநாவுக்கரசர் பளிச்!
காங்கிரஸ் தலைவராக ஈவிகேஎஸ் வரமாட்டார் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால், ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் தலைவராக வரவே மாட்டார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், தற்போதைய தலைவர் திருநாவுக்கரசருக்கும் வார்த்தை போர் நடந்து வருகிறது.
இரு தரப்பின் ஆதரவாளர்களும் இது சம்பந்தமாக நேரடியாகவே ஒருவரையொருவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி கொண்டனர்.
பரபரப்பான சூழ்நிலை
தனித்தனியாக டெல்லி சென்று ராகுல் காந்தியிடம் புகாரும் அளித்துவிட்டு வந்தனர். இந்நிலையில் ராகுலின் அழைப்பை ஏற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லி சென்றிருக்கிறார். இதையடுத்து தமிழக காங்கிரசில் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பு
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்றும், இளங்கோவனுக்கு முக்கிய பொறுப்பு ஏதாவது தரப்படும் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் பேசினார்.
எல்லாரையும் திட்டுகிறார்
அப்போது ஈவிகேஎஸ் டெல்லி பயணம், புதிய தலைமை உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு திருநாவுக்கரசர் சொன்னதாவது: "ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை வசைபாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவர் என்னை மட்டுமல்ல, எல்லோரையுமே திட்டுகிறார். ப.சிதம்பரம், அவரது மனைவி, மகன், தங்கபாலு என பொறுப்பில் உள்ள அனைவரையுமே வசைபாடுகிறார்.
தலைவராக மாட்டார்
தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற போறேன் என்று சொல்லி ஓயாமல் டெல்லி போய் கொண்டு இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். முடிந்தால் முயற்சி செய்யட்டும். தலைவரை மாற்றிவிட்டு வரட்டும். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் தலைவராக வரவே மாட்டார்" என்றார்.