காங்கிரஸில் நின்றது இரு மாஜிக்கள்.. ஏறுமுகத்தில் ஒன்று.. இறங்குமுகத்தில் இன்னொன்று!
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இரு முன்னாள் தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் ஒருவர் ஏறுமுகத்திலும் இன்னொருவர் இறங்கு முகத்திலும் இருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சி என்றாலே அதில் மோதல்கள் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியிலும் கோஷ்டி மோதல்கள் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அதிலும் ஆதரவாளர்களுக்கிடையே அடிதடி தகராறு வந்த அளவுக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர்களான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் திருநாவுக்கரசருக்கும் இடையே பெரிய யுத்தமே நடந்தது. இருவரும் எலியும் பூனையுமாக இருந்து வந்தனர்.

விமர்சனம்
தான் அதிமுகவிலிருந்திருந்தால் இன்னேரம் முதல்வராகியிருப்பேன் என திருநாவுக்கரசர் கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பழையபடி திருநாவுக்கரசர் அதிமுகவில் சேர்ந்து கொள்ளட்டுமே , முதல்வர் என்ன பிரதமர் கூட ஆகிவிடலாம் என்று ஈவிகேஎஸ் விமர்சனம் செய்திருந்தார்.

தாக்குதல் சம்பவம்
இது போல் சின்ன சின்ன பிரச்சினைகளை கூட இருவரும் ஊதி பெரிசாக்கினர். முதலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக இருந்தார். பின்னர் திருநாவுக்கரசர் தலைவராக இருந்தார். இந்த காலகட்டத்தில் இருவரது ஆதரவாளர்களும் சத்தியமூர்த்தி பவனில் தாக்கிக் கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

தேமுதிக வேட்பாளர்
தற்போது திருநாவுக்கரசருக்கு பதில் கே எஸ் அழகிரி தலைவராகிவிட்டார். இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்ஸும், திருநாவுக்கரசரும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர். இதில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் தேமுதிக வேட்பாளரை காட்டிலும் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

ஓபிஎஸ் மகன்
இந்த நிலையில் தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் முதலில் முன்னிலை வகித்து வந்தார். இதைத் தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வந்தார். நேரம் ஆக ஆக தற்போது வரை ஓபிஎஸ் மகன் லீடிங்கில் உள்ளார். ஒரே கட்சியில் முன்னாள் தலைவர்கள் போட்டியிட்டு ஒருவர் ஏறுமுகத்திலும் இன்னொருவர் இறங்குமுகத்திலும் இருப்பது தொண்டர்களுக்கு வேதனை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications