10 சீட் காங்கிரஸ்.. வேட்பாளர்களை அறிவிக்க ஏன் இந்த தாமதம்.. இவர்தான் காரணமா!
Recommended Video
சென்னை: மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலையை பார்ப்பதில் படு பிசியாக உள்ளனர். மக்களவைக்கு நடைபெறும் இரண்டாவத் கட்ட தேர்தலில் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொகுதிகளுக்குமான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ் தவிர அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் யார் யார் என்பதை அறிவித்து விட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெளிவரும் என்றிருந்த நிலையில் கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் மரணமடைந்ததால் பாஜக நிகழ்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஏன் தாமதம் ஆகிறது என்று நாம் விசாரித்தபோது அதற்கு ஒருவரை கை காட்டினார்கள் கதர் சட்டைக்கார்கள்.
மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியில் உள்ள, திமுக, விசிக, மதிமுக, இடதுசாரிகள் என அனைவருமே தங்களது வேட்பாளர்கள் யார் என்பதை அறிவித்ததோடு நாளை திருவாரூரில் இருந்து தனது பிரச்சாரத்தையும் தொடங்கவுள்ளார், திமுக தலைவர் ஸ்டாலின். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நாளும் இன்று தொடங்குகிறது நாளை புதன்கிழமை எனபதால் நாளையிலிருந்து பல கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்குவார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளிவர தடையாக இருக்கும் அந்த ஒருவர் யார் என விசாரித்தபோது காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்று கூறுகிறார்கள் காங்கிரசார்.
கோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவி ஏற்பு.. 2 துணை முதல்வர்களும் பதவி ஏற்பு!
அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரரான ஈவிகேஎஸ் இந்த தேர்தலில் தனக்கு எப்படியும் சீட் கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் ஈரோட்டில் பல வேலைகளை செய்து வந்தார். ஆலோசனை கூட்டம் போடுவதில் இருந்து தொகுதியில் மக்களை சந்திப்பது என பல வேலைகளை செய்து வந்தார். ஆனால் திமுக ஈரோட்டை மதிமுகவுக்கு ஒதுக்கி விட்டது. மதிமுக சார்பில் அங்கு கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் கோவையை தனக்கு தருமாறு கேட்டார் ஈவிகேஎஸ். அதுவும் கம்யுனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட பின்னர் திண்டுக்கல்லையாவது தாருங்கள் என்றார் ஆனால் அதை திமுக தரமறுத்து தனது வேட்பாளரை நிறுத்திவிட்டது. இந்த நிலையில் விருதுநகரை தனக்கு தருமாறு காங்கிரஸ் தலைமைக்கு அவர் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
அதற்கு பல்வேறு காரணங்களை அடுக்கும் அவர் கடந்த 2014 மக்களவை தேர்தலின்போது கூட்டணி அமையாததால் தலைவர்கள் போட்டியிட தயங்கியபோது தான் மட்டுமே முதல் ஆளாக போட்டியிட முன்வந்தாதாகவும் இப்போது கூட்டணி அமைந்து உள்ளபோது தனக்கு வாய்ப்பு தர மறுப்பது நியாயமற்றது என்றும் கூறிவருகிறார். அதோடு பிற கட்சிகளுக்கு சென்று வந்தவர்களுக்கு சீட் ஒதுக்கியுள்ளார்கள் ஆனால் காங்கிரசையே நம்பியிருந்தவர்களுக்கு சீட் இல்லையா என்ற கேள்வியையும் அவர் கேட்டு வருகிறார்.
அதோடு இன்னொரு முக்கியமான பாயிண்டையும் அவர் முன்வைக்கிறார் அதாவது முக்குலத்தோர் பிரிவிலிருந்து திருநாவுக்கரசர், மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கும் செட்டியார் சமுதாயத்தில் இருந்து கார்த்தி சிதம்பரம், செல்லகுமார் ஆகியோருக்கும் சீட் ஒதுக்கும்போது தனது சமுதாயத்திற்கு சீட்டே வழங்கப்படவில்லை ஆகவே தனக்கு சீட் வழங்கவேண்டும் என்று சமுதாய அடிப்படையிலும் கோரிக்கை விடுத்து வருகிறார். இவரது நீண்ட நெடிய போராட்டத்தினால் காங்கிரஸ் தலைமை இன்னும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் உள்ளதாம் அதனாலேயே வேட்பாளர் பட்டியலும் தாமதம் ஆகிறது என்கிறார்கள் கதர் சட்டையினர்.