3 தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள திருவொற்றியூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி,குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோ, பதவி இழந்தாலோ அடுத்த ஆறு மாதத்துக்குள் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது 3 சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளன.
பிப்ரவரி 27 ஆம் தேதி திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.பி. பி. சாமி, பிப்ரவரி 28 ஆம் தேதி குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் ஆகியோர் மரணம் அடைந்தனர். இந்த நிலையில் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக ஜூன் 10 ஆம் தேதி மருத்துவமனையில் காலமானார்.
இதனால் மூன்று தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதம் வரை உள்ள நிலையில் இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ, குடியாத்தம், திருவொற்றியூர், சேப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகள் காலியாக உள்ளன. கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தால் மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி தம்பதிகளிடம் ரூ. 25,000 செல்லாத நோட்டுக்கள்... உதவிய கலெக்டர்!!
தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தல் ஆணைய விதிப்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சோதனை முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. எனினும், இடைத் தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார் சத்யபிரதா சாஹூ.
2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்து அதிமுக அரசு பதவியேற்றதில் இருந்து இதுநாள் வரைக்கும் பல இடைத்தேர்தல்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது. எதிர்கட்சியினரும் ஆளும் கட்சியினரும் போட்டி போட்டு பணத்தை வாரி இறைப்பார்கள். இந்த இடைத்தேர்தல் நடைபெறுமா? என்பதே மூன்று தொகுதி வாக்காளர்களின் எதிர்பார்ப்பாகும்.