அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம்.. ஓபிஎஸ் - இபிஎஸ் அறிவிப்பு
சென்னை: அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதிமுகவில் சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்த அன்வர் ராஜா. இவர் தீவிர ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா பக்கம் இருந்த இவர், அவர் சிறைக்குச் சென்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராகச் செயல்பட்டார்.
சர்ச்சை ஆடியோ
இந்தச் சூழலில் எடப்பாடி பழனிச்சாமியை அன்வர் ராஜா விமர்சிக்கும் வகையில் ஒரு ஆடியோ ரிலீஸாகி பரபரப்பைக் கிளப்பியது. அதில் சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைத் தக்க வைத்திருந்தார் எடப்பாடி தன்னை புரட்சித் தலைவர் என்றே சொல்லியிருப்பார் என விமர்சனம் செய்திருந்தார். இதில் அவர் எடப்பாடி பழனிச்சாமியை ஒருமையில் பேசிவிட்டதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது.
ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பை
இதனால் கடந்த வாரம் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் கூட சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக தற்போது வலுவில்லாமல் இருப்பதால் கட்சியை வலுப்படுத்த சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் என்றும் அன்வர் ராஜா தெரிவித்ததாகவும் இதனால் அவருக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. குறிப்பாக அன்வர் ராஜாவை பேச விடாமல் தடுத்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வெளியே போகச் சொன்னதாகவும் தகவல் வெளியானது. இது மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.
கட்சியில் இருந்து நீக்கம்
இதற்கிடையே புதன்கிழமை (டிச.1 )அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு
இது தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளைத் தெரிவித்து, கழகத்திற்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ. அன்வர்ராஜா, Ex, M.P(கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்." என்று கூறப்பட்டுள்ளது.