புதுரூட்டில் ராம்மோகன் ராவ் ஐ.ஏ.எஸ்... அரசியல் கட்சி தொடங்கத் திட்டம்?
சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் தெலுங்கு பேசும் மக்களை ஒன்றிணைத்து வரும் 2021-ம் ஆண்டுக்குள் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச்செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட ராம்மோகன் ராவ் ஐ.ஏ.எஸ். இப்போது ஓய்வு பெற்றுவிட்டார்.
ஜெயலலிதா மரணமடைந்த போது அவரின் இறுதிச்சடங்குகளை அரசு சார்பில் முன்னின்று மேற்கொண்டவர். இதனிடையே அதற்கடுத்து நிகழ்ந்த கட்சி மாற்றத்தால் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
முதல்முறையாக
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது என்றால் அது ராம் மோகன் ராவ் வீடு தான். இவரது மகன் இல்லம் மற்றும் அலுவலகத்திலும் கிடுக்கிப்பிடி சோதனை நடத்தப்பட்டது. இதனால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மீது கோபம் கொண்ட ராம்மோகன் ராவ், ஒரு தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடக்கிறது, அதை முதல்வர் வேடிக்கை பார்க்கிறார், அம்மா இருந்திருந்தால் இது நடக்குமா என செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசம் காட்டினார். தைரியம் இல்லாதவர்கள் இன்று ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் என வீர வசனம் பேசினார்.
ஓய்வுபெற்றார்
அதற்கு பரிசாக அவரை தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது தமிழக அரசு. இது அவரை மேலும் கொந்தளிக்க வைத்தது. பிறகு சிறிது நாட்களில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகத்துக்கு மாற்றப்பட்டு இப்போது ஓய்வும் பெற்றுவிட்டார் ராம்மோகன் ராவ். இந்நிலையில் தனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் சார்ந்த தெலுங்கு பேசு மக்களை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஆந்திராவில் பவன் கல்யான் நடத்தும் ஜனசேனா கட்சிக்கு ஆலோசகராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆபத்து
வருமான வரித்துறை சோதனை நடந்த போது தனது உயிருக்கு குறி வைக்கப்பட்டுள்ளதாகவும், சேகர் ரெட்டிக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், தனது மருமகள் பேறுகாலத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் எப்படி நுழையலாம் என கொந்தளித்தார். தனது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனைக்கு கண்டனம் தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார். அதேசமயம் அதிமுகவில் இருந்து ஒருவர் கூட வாய்திறக்காததால் அந்தக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மீது இன்னும் கோபத்தில் தான் இருக்கிறார். இதனிடையே 2021 தேர்தல் முடிவை பொறுத்து பலரது ரகசியங்களை கூட அவர் விரைவில் வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.
அரசியல் பணி
இந்நிலையில் தமிழகத்திலும் அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது தான் அனைவரது புருவங்களையும் உயர்த்த செய்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று மதுரையில் நடைபெற்ற திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். நேரடியாக அரசியல் கட்சி தலைவராக வர விரும்பாவிட்டாலும் தெலுங்கு பேசும் மக்களுக்காக ஒரு கட்சியை தொடங்கி அதை யாரையாவது நிர்வகிக்க வைத்து இவர் இயக்குவார் எனக் கூறப்படுகிறது. வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்குள் புதிய அரசியல் கட்சி ஒன்று உதயமாகும் எனத் தெரிகிறது.