எப்பவுமே பின்னாடி 50 பேர் இருப்பாங்க.. சும்மா கெத்தா இருக்கும்.. ஆனா இப்ப.. கதறி அழும் ரூட் தல!
முன்னாள் ரூட் தல மாணவரின் கண்ணீர் வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
சென்னை: "அன்னைக்கு நான்தான் ஹீரோ.. என் பின்னாடி எப்பவுமே 50 பேர் இருப்பாங்க.. சும்மா கெத்தா இருக்கும்.. ஆனா இன்னைக்கு..?" என்று தன் கதையை சொல்லி விம்மி அழுகிறார் ஒரு முன்னாள் ரூட் தல மாணவர்! இந்த வீடியோதான் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
ரூட் தல விவகாரத்தை ஒவ்வொரு வருடமும் தடுத்து நிறுத்த போலீசார் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த வருடம் மாணவர்கள் எல்லை மீறி நடந்து கொண்டதால், போலீசாரின் அதிரடிகளும் பெரிய அளவிலேயே உள்ளன.
மாணவர்களுக்கு இடையே நடக்கும் இந்த மோதலை முற்றிலுமாக தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கல்லூரி மாணவர்களிடையே பேசி அவர்களுக்கு கவுன்சிலிங் தந்தனர். உறுதிமொழியை ஏற்கவைத்தனர்.
வேகமாக வந்த கார்.. மடக்கிய போலீஸ்.. தப்பி ஓடிய சுந்தரேசன்.. உள்ளே எட்டி பார்த்தால்.. ஷாக்!
கண்ணீர் வீடியோ
இப்போது முன்னாள் ‘ரூட் தல' மாணவர்களை தேடி கண்டுபிடித்து, அவர்களின் இன்றைய நிலைமையை, வீடியோவில் பேச வைத்து, அதை விழிப்புணர்வுக்காக மாணவர்களிடம் சென்னை மாநகர போலீசார் வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி ஒரு முன்னாள் ‘ரூட் தல' மாணவர் பேசும் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் அந்த மாணவரின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் பேசியுள்ள சுருக்கம் இதுதான்:
50 பேர்
"நான் 2011-2014-ல் சென்னை பச்சையப்பன் காலேஜில்தான் படிச்சேன். அம்பத்தூரில் இருந்து மந்தைவெளி போற 41-டி பஸ் ரூட்ல நான் ‘ரூட் தல'யாக இருந்தேன். அந்த 3 வருஷம் ஹீரோவா இருந்தேன்.. எப்பவுமே 50 பசங்களை திரட்டிட்டு,கெத்தாக இருந்தேன்.. என் பின்னாடி எப்பவுமே அந்த 50 பேர் இருப்பாங்க.
கெத்துதான்
பஸ் டிரைவர்-கண்டக்டர் என்ன சொன்னாலும் நாங்க கேட்கமாட்டோம். பாட்டு பாடிட்டே இருப்போம். அது எங்களுக்கு ஜாலியாக இருந்தது. நாங்கள் போகும் பஸ்சில் நாங்கள் தான் மாஸ்-ஆக இருக்கணும், எங்களை தாண்டி எந்த காலேஜ் பசங்களும், இருக்கக்கூடாதுன்னு எதிர்பார்த்தோம். அதனால மாநிலக்கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்களை அடிச்சு உதைப்போம். இது எங்களுக்கு ரொம்ப கெத்தா இருந்தது.
கூலி வேலை
வீட்டுல என் அம்மா, அப்பா சொல்றதையும் அப்போ நான் கேட்கல.ரொம்ப ஏழ்மையான குடும்பம்தான். 3 மாணவர்களை என்னை அடிச்சு உதைச்சதால டி.பி.சத்திரம் போலீசார் என் மீது கேஸ் போட்டாங்க. கைது செய்து ஜெயிலிலும் அடைச்சாங்க. என் அப்பா மாற்றுத்திறனாளி. தாயார் கூலி வேலைதான். என்னை ஜாமீனில் எடுக்கவே ரொம்ப கஷ்டப்பட்டாங்க. கூலி வேலை செய்துதான் என்னை படிக்க வெச்சாங்க.
குற்றவாளி
அன்னைக்கு என்கூட இருந்த 50 பேரில் ஒருத்தர்கூட என் பக்கம் இல்லை. அப்பா, அம்மா மட்டும்தான் இருந்தாங்க. ஜெயில்ல என்னை பார்க்க யாருமே வரல. எனக்காக எங்க அப்பா, அம்மா கதறி அழுதாங்க. 9 நாள் ஜெயில்ல இருந்தேன். அதுக்கப்பறம் நான் போலீஸ் வேலைக்கு தேர்வானேன். எழுத்து, உடல் தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனால் என் மேல இருக்கிற கேஸ் எனக்கு வேலை கிடைக்கவே தடையாக இருந்தது. காலேஜ் முடிந்தாலும், இந்த கேஸ் என்னை விடவில்லை. வேலை பார்க்க வேண்டிய நான் குற்றவாளியாக நின்றேன்.
தகர்ந்தது
அன்னைக்கு ஹீரோ.. இப்போ என்னை ஜீரோ ஆக்கிவிட்டு அவர்கள் எங்கியோ ஹீரோவாக இருக்கிறார்கள். எனது கனவும் தகர்ந்து போனது. இந்த ரூட் தல எல்லாம் கனவுதான். அந்த 3 வருஷம்தான் உங்களுக்கு ஜாலி. அது லைப் இல்லை. இது அட்வைஸ் கிடையாது. அனுபவத்தில் சொல்கிறேன். ஒரு அதிகாரியாக ஆக வேண்டிய நான் இன்னைக்கு தண்ணி கேன் போட்டுட்டு இருக்கேன்" என்று சொல்கிறார். இப்படி சொல்லும்போது இளைஞரின் குரல் உடைந்து அழும் சத்தத்தை நம்மால் கேட்க முடிகிறது.