தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார்
Recommended Video
சென்னை: தமிழக முன்னாள் சபாநாயகர் பி. எச் பாண்டியன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் பாண்டியன். 1980-ஆம் ஆண்டு தமிழக சட்டசபையின் துணை சபாநாயகராக இருந்தார். அதிமுக எம்எல்ஏவாகவும் எம்பியாகவும் பணியாற்றியவர்.
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் 1989-இல் அதிமுக இரண்டாக பிரிந்தது. அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக ஜானகி அணியில் இடம்பெற்றிருந்தார். அப்போது ஜானகி அணி சார்பில் பி எச் பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றார்.
சட்ட சிக்கல்கள்
பின்னர் மீண்டும் ஜெயலலிதா அணியில் சேர்ந்த பி எச் பாண்டியன் அதிமுக அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றினார். வழக்கறிஞராக இருந்து அதிமுகவில் இருந்த பல சட்ட சிக்கல்களை தீர்த்து வைத்தவர்.
மனோஜ் பாண்டியன்
ஜெயலலிதா மறைந்த போது கட்சியையும் ஆட்சியையும் சசிகலா கபளீகரம் செய்ய துடித்தார். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அணியில் முதல் ஆளாக தன் மகன் மனோஜ் பாண்டியனுடன் வந்து ஆதரவு தெரிவித்தார்.
சலசலப்பு
எம்ஜிஆர் - ஜெயலலிதா என அதிமுகவின் இரு பெரும் தலைவர்களுடன் பணியாற்றியவர். இருவரது மரணத்தையும் கண்டவர். இருவரது மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட அதிமுக சலசலப்புகளில் இவரும் முக்கியமாக திகழ்ந்தவர். இவரது மகன் மனோஜ் பாண்டியன், 2001- இல் எம்எல்ஏவாக இருந்தார்.
பிரகடனம்
பி எச் பாண்டியன் பதவிக்காலத்தில்தான் ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனை சிறைக்கு அனுப்ப தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக பிரகடனம் செய்தார். தனது செயல்பாட்டால் சபாநாயகருக்கான அதிகாரங்களை பின்வரும் சபாநாயகர்கள் பின்பற்ற ஏதுவாக இருந்தார்.
சிந்தியா
பி எச் பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் பி எச்டி பட்டம் பெற்றவர். இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இவர்களுக்கு 4 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.