சீமான் ‘தில்’.. உற்றுப்பார்க்கும் அமித்ஷா! டெல்லிக்கு தெரியும் “அதே பாலிசி”! சொல்றது யாருனு பாருங்க!
சீமான் பற்றி அமித்ஷாவும், டெல்லி பாஜக வியூக நிபுணர்களும் நன்றாக அறிந்துள்ளனர் என ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார்.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமான் தில்லாக, துணிச்சலாக நிற்கிறார். அமித்ஷாவுக்கும், டெல்லியில் இருக்கும் பாஜக தேர்தல் வியூக குழுவுக்கும் சீமான் யார்? அவர் எவ்வளவு தைரியமானவர் என எல்லாம் நன்றாகத் தெரியும். சீமானின் பாணி தான் அமிம்தாவின் பாணியும் என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக போட்டியிடாமல் ஒதுங்கும் திட்டத்தில் இருக்கிறது. அதேநேரம் அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணிகளும் தனித்தனியாக களம் காண்கின்றன.
பாஜக தங்கள் ஆதரவு யாருக்கு என இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், பாஜக என்ன முடிவெடுக்கும், அமித்ஷாவின் திட்டம் என்ன என்பது பற்றியெல்லாம் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் ரவீந்திரன் துரைசாமி. அவரது பேட்டி இனி..
இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க அதிரடி.. ஈரோடு வங்கிகளுக்கு தேர்தல் அதிகாரி கட்டுப்பாடு!
அமித்ஷாவின் குறி
கேள்வி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? கடந்த 2 ஆண்டுகளாக எதிர்க்கட்சி நாங்கள் தான் எனச் சொல்லி வரும் பாஜக இந்த இடைத்தேர்தலில் போட்டியிட ஏன் இவ்வளவு தயங்குகிறது
பதில் : பொதுவாக இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும் பாஜக போட்டியிட வேண்டும் என்றுதான் அமித்ஷா நினைப்பார். இந்தியாவில் மிகப்பெரிய ஒருங்கிணைப்பாளர் அமித்ஷா. அமித்ஷாவின் நோக்கம் என்னவென்றால், ஒரு கட்சி ஒரு இடத்தில் வளர்கிறது என்றால் அங்கு ஒவ்வொரு வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் தமிழர் கட்சியின் சீமான் கூட எல்லா இடைத்தேர்தல்களிலும் நின்றுவிடுவார். தேர்தலில் எவ்வளவு வாக்குகள் வாங்குகிறோம் என்பது பிரச்சனையில்லை, ஆனால், நாங்கள் எதற்காக களத்தில் நிற்கிறோம் என்பதை ஹைலைட் செய்துவிடுவார். அமித்ஷாவின் திட்டமும் இந்த இடைத்தேர்தலில் நிற்கவேண்டும் என்பதுதான். நானும், பாஜக ஒரு ஸ்டார் வேட்பாளரை இந்த இடைத்தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று விரும்பினேன்.
எடப்பாடியிடம் கேட்க வேண்டும்
ஆனால், பாஜக உட்கட்சி அரசியலில், எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணையவேண்டும் என்று சொல்கிறார்கள். வரும் எம்.பி தேர்தலில் தமிழிசை விருதுநகர் தொகுதியை எதிர்பார்க்கிறார். எச்.ராஜா, சிவகங்கையை எதிர்பார்க்கிறார். எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் நினைக்கிறார்கள். இப்போது ஓபிஎஸ், பாஜகவை ஆதரிப்பதாகச் சொல்லிவிட்டார். பாஜக தலைவர்கள் நேர்மையாக இருந்து கேட்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஓபிஎஸ், மோடி மீண்டும் பிரதமர் என்று சொல்லிவிட்டார். ஈபிஎஸ் ஏன் சொல்லவில்லை என்று கேட்க வேண்டும்.
பாஜக இனியும் நிற்கலாம்
ஒரு கட்சியின் ஒட்டுமொத்த முடிவு என்று வரும்போது, கட்சியில் தேர்தலில் நின்று எம்.பியாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் எடப்பாடி ஓபிஎஸ் ஒன்றாக இருக்கவேண்டும், அதில் எந்த பிசிறும் வரக்கூடாது, அப்படி ஏற்பட்டால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று அவர்கள் நினைக்கலாம். அப்படி ஒரு எண்ணத்தின் அடிப்படையில் தமிழ்நாடு பாஜக, அதிமுகவுக்கு எதிராக நிற்க வேண்டாம் என முடிவெடுத்திருக்கலாம். இன்னும் கூட வேட்பு மனு தாக்கல் ஆரம்பிக்கவில்லை. இனியும் கூட களத்தில் நிற்கலாம். நிற்கமாட்டார்கள் என இப்போதே முடிவு செய்ய முடியாது.
அண்ணாமலைக்கு தயக்கம் ஏன்
கேள்வி : பாஜக மேலிடம், இந்த இடைத்தேர்தலில் களமிறங்கச் சொல்வதாகவும், தமிழ்நாடு பாஜக, போட்டியிட வேண்டாம் என மறுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலைக்கு போட்டியிடுவதில் தயக்கம் இருக்கிறதா?
பதில் : அண்ணாமலை, தமிழிசை, பொன்னார் ஆகியோரை விட தீவிரமாகச் செயல்படுகிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆர்கே நகரில் தமிழிசை தான் வேட்பாளர் என பொன்.ராதாகிருஷ்ணன் தான் தகவல்களைப் பரப்பினார். அதோடு தமிழிசையை ஓரங்கட்டுவோம் என பிளான் செய்தார்கள். தமிழிசையை நிறுத்துவது ஜனநாயக விரோதம் என இல.கணேசன் சொன்னார். இப்படி தேசியக் கட்சியின் தலைவர்கள், தங்கள் தனிப்பட்ட ஆதாயத்துக்காக அரசியல் செய்வது பாஜகவிலும் அதிகமாகவே இருக்கிறது. அண்ணாமலை, பல சாதக பாதகங்களைப் பார்த்துத்தான் முடிவெடுக்க முடியும். அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. அண்ணாமலை சஸ்பென்சாக போட்டியிடுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அண்ணாமலை, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும், அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் முடிவுகள்
பெருந்துறையில் இடைத்தேர்தல் நடந்து வைகோ இரண்டாமிடம் வந்தார். மைலாப்பூரில் நான்காவது இடம் பிடித்தது மதிமுக. இங்கு 2வது இடம் பெற்றவர், அங்கு 4வது இடத்திற்குப் போய்விட்டார். பெருந்துறைக்கும் மைலாப்பூருக்கும் வேறுபாடு அதிகம். திண்டுக்கல்லில் எம்ஜிஆர் 55% வந்தார். தமிழ்நாடு முழுவதும் 30% வந்தார். அதே இடைத்தேர்தல் சென்னையிலோ, தஞ்சாவூரிலோ வந்திருந்தால் அதிமுகவை விட திமுக அதிக வாக்குகளைப் பெற்றிருக்கும். ஆர்.கே.நகரில் வென்ற டிடிவி தினகரன், மற்ற இடங்களில் சோபிக்க முடியவில்லை. எனவே இடைத்தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு தழுவிய அளவில் பொருந்தாது.
சீமான் துணிச்சல் அமித்ஷாவுக்கு தெரியும்
சீமான் இந்த இடைத்தேர்தலில் தில்லாக, துணிச்சலாக நிற்கிறார். அமித்ஷாவுக்கும், டெல்லியில் இருக்கும் தேர்தல் வியூக குழுவுக்கும் சீமான் யார்? அவரது அரசியல் என்ன? அவர் எவ்வளவு தைரியமானவர் என்பதும், அவர் இந்த இடைத்தேர்தலில் நிற்பது என எல்லாம் பாஜகவுக்கு மிகவும் நன்றாகத் தெரியும். வெறும் 7 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு 45% வாக்குகள் வைத்திருக்கும் கருணாநிதி ஸ்டாலினுக்கு இணையாக தன்னை முன்வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த பிம்பப்படுத்தல் தான் அரசியலில் ஒருவரை தூக்கி விடும் என்பது அமித்ஷாவுக்கு நன்கு தெரிந்த விஷயம் தான்.
ஒவ்வொரு தேர்தலையும்
சாதிவாரி கணக்கெடுப்பு, பஞ்சமி நில மீட்பு, முஸ்லீம் சிறைக்கைதிகள் விடுதலை இந்த விஷயங்களையும் அனைத்து தொகுதிகளுக்கும் ஹைலைட் செய்துவிடுவார் சீமான். ஆர்கே நகரில் ஒன்றரை சதவீத வாக்குகள் வாங்கியவர் 2019 நாடாளுமன்றத் தேர்தல் 4 சதவீதத்தை நெருங்கினார், சட்டமன்றத் தேர்தலில் 7 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஒவ்வொரு தேர்தலிலும் சீமான் நிற்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன், டிடிவி தினகரன், சீமான் ஆகியோரில் தினகரன் தான் மேலே நின்றார். பின்னர், சீமான் இவர்களில் எழும்பி மேலே செல்வதற்குக் காரணம் சீமான் ஒவ்வொரு தேர்தலையும் பயன்படுத்துகிறார். அதேபோல, பாஜக டெல்லி தலைமையும் ஒவ்வொரு தேர்தலையும் பயன்படுத்தவே விரும்பும். மற்ற மாநிலங்களிலும் இதே பாணியைத்தான் பாஜக பின்பற்றுகிறது.
ஓபிஎஸ்ஸை விட்டுவிட்டு
ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிற்காததற்குக் காரணம் ஒருவேளை, ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து நின்றால் வாக்கு வங்கி பலத்துக்கு உதவும் என்பதால் இருவரையும் இணைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடலாம். ஓபிஎஸ்ஸை விட்டுவிட்டு, ஈபிஎஸ்ஸை தமிழ்நாடு பாஜக ஆதரித்தால் அது ஒரு சாதி ரீதியான அணியாக மாறிவிடும். அப்படி வந்தால், மற்ற சாதியினர் மத்தியில் பெரிய எதிர்ப்பலை ஏற்பட்டுவிடும். எனவே அதற்கு வாய்ப்பில்லை. ஒரு இலை ஓபிஎஸ், ஒரு இலை ஈபிஎஸ் என்ற நிலை இருந்தால் தான் சாதி நியூட்ரல் என்ற பலன் கிடைக்கும். அதை யோசித்தே, பாஜக இந்த இடைத்தேர்தலில் களமிறங்க வேண்டாம் என முடிவெடுத்ததாக நான் நினைக்கிறேன்.
பாஜகவுக்கு பின்னடைவு?
கேள்வி : தினகரன் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்ததால் அவரது இடத்தில் இருந்து இறங்கினார். இதே சூழல் பாஜகவுக்கும் பொருந்தும் தானே.. இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாதா?
பதில் : நிச்சயமாக பின்னடைவை ஏற்படுத்தும். நான் சொல்லும் கருத்துகளை பாஜக பரிசீலிக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் ஆம் ஆத்மி கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தால் காங்கிரஸ் அங்கு வென்றிருக்காது என்பதை சொல்லி இருக்கிறோம். ஆம் ஆத்மி பிரிப்பது காங்கிரஸ் வாக்குகளைத்தான், ஆம் ஆத்மியை அழிப்பது பாஜகவுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று சொல்லியிருக்கிறோம். அதேபோல, இங்கு இடைத்தேர்தலில் நிற்பது லாபம் என்ற கருத்தைச் சொல்லி இருக்கிறோம். அவர்கள் பல சூழல்களை வைத்து, இறுதி முடிவைச் சொல்வார்கள். நமது கருத்தில் 10க்கு 8 சரியாக வரும்.