வெற்றிலை பாக்கு வைத்தா அழைக்க முடியும்...? நொந்துகொண்ட கே.எஸ்.அழகிரி
சென்னை: மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அதில் பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்காததை நினைத்து கே.எஸ்.அழகிரி நொந்துகொண்டாராம்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை மத்திய அரசு பறிக்க முயற்சிப்பதாக கூறி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மூன்று முதல் 5 பேர் வரை சமூக இடைவெளியை பின்பற்றி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் அண்ணா நகர் தபால் நிலையம் முன்பு திருநாவுக்கரசர் தலைமையிலும், தண்டையார்பேட்டை தபால் அலுவலகம் அருகே வசந்த்குமார் எம்.பி. தலைமையிலும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசிய அவருக்கு புகார்கள் குவிந்துள்ளன. அவர் வரவில்லை, இவர் என்னை அழைக்கவில்லை என மாவட்டங்களில் இருந்து வந்த புகார்களால் அப்செட்டான கே.எஸ்.அழகிரி, தனது கட்சி நிர்வாகிகளை நினைத்து வருத்தப்பட்டுள்ளார்.
அந்த அரசியல் தலைவரை எந்த காலத்திலும் நம்பாதீங்கன்னு சொன்னார் கருணாநிதி.. ராமதாஸ் போட்ட பரபர ட்வீட்
திமுக உள்ளிட்ட எந்தக் கூட்டணிக் கட்சிகளையும் அழைக்காமல் தமிழக காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் பிரச்சனைகளை கையில் எடுத்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதில் முழு அளவில் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என எண்ணிய கே.எஸ்.அழகிரிக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியதாம். இதன் வெளிப்பாடாகதான் நிர்வாகிகளை வெற்றிலை பாக்கு வைத்தா அழைக்க முடியும் என அவர் நொந்துகொண்டிருக்கிறார்.