பெரும் வீழ்ச்சியை சந்திக்கும்.. ஜெயலலிதா இல்லாத அதிமுக.. எக்ஸிட் போல்கள் சொல்வது என்ன?
சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளைப் பார்த்தால் தமிழகத்தில் அதிமுக அதிக தொகுதிகளை இழக்கிறது. அதேநேரத்தில் திமுக அதிக தொகுதிகளை வெல்லும் என்று தெரிகிறது.
நாடு முழுவதும் கடந்த மாதம் 11ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியது. தொடர்ந்து 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து செய்தி சேனல்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் படி தமிழகத்தில் அதிமுக பெரும் சரிவை சந்தித்துள்ளது.
கூட்டணி
தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் தேர்தலை எதிர்கொண்டன.
திமுக முன்னணி
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அதிமுகவுக்கு எதிராகவே உள்ளது. இந்திய டுடே - ஆக்சிஸ் போல் கருத்து கணிப்பில் திமுக அணி 34 முதல் 38 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணி 0-4 இடங்களை பெறும் என்று கணித்து இருக்கிறது.
அதிமுகவுக்கு குறைவு
இதேபோல் நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணிக்கு 38 இடங்களில் மொத்தம் 22 முதல் 24 இடங்கள் வரை கிடைக்கும். அதிமுகவின் மெகா கூட்டணிக்கு 14 முதல் 16 இடங்கள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
39 இடங்களை கைப்பற்றிய அதிமுக
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இதில் 37 இடங்களை அதிமுக கைப்பற்றியது. கடந்த தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
அதிமுகவுக்கு இழப்பு
இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் அந்த கூட்டணி அதிக தொகுதிகளை இழக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஜெ. இல்லாததா?
ஜெயலலிதா இல்லாததால் அதிமுகவுக்கு இந்த பின்னடைவா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் பாஜகவுக்கு அந்த அளவுக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்ததே அதிமுகவின் பின்னடைவுக்கு காரணம் என்றும் கருதப்படுகிறது.