எக்சிட் போல்.. தமிழகத்தில் அதிமுகவின் சரிவுக்கு காரணம் என்ன?.. ஜெயலலிதா இறப்பு மட்டுமில்லைங்க!
Recommended Video
சென்னை: இந்தியா டுடே எக்சிட் போல் முடிவுகளின்படி தமிழக இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெறும் 3 இடங்களிலிருந்து 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் தமிழகத்தில் மோடி அலை வீசாததற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கும் வித்திடும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பு முடிவுகளின்படி 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்றும் திமுகவுக்கு 14 இடங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்றும் 5 இடங்களில் கடும் போட்டி நிலவும் என்றும் கூறப்படுகிறது.
21 தொகுதிகள்
கடந்த 2016-ஆம் ஆண்டு மொத்தமுள்ள இந்த 22 தொகுதிகளில் 21 தொகுதிகளில் அதிமுகவும், ஒரு தொகுதியில் மட்டும் திமுகவும் வெற்றி பெற்றது. தற்போது இந்த நிலை அப்படியே மாற போகிறது. இதற்கு காரணம் என்னவாக இருக்கும். ஜெயலலிதா இல்லாதது பெரும் சரிவு என்று சொல்லப்பட்டாலும் மக்களின் கோபத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
44 இடங்கள்
கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 39 இடங்களில் அதிமுக 37 இடங்களை வென்றுள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. அப்போது மோடி அலை தமிழகத்தில் எடுபடவில்லை.
அடிக்கல் நாட்டு விழா
அது போல் இந்த முறையும் மோடி அலை வீசவில்லை. கடந்த தேர்தலில் மோடியா லேடியா என கர்ஜித்த ஜெயலலிதாவின் அதிமுக தற்போது அதே மோடி அரசுடன் கூட்டணி சேர்ந்துள்ளது அக்கட்சியினராலேயே ஜீரணிக்க முடியவில்லை. மேலும் கடந்த 5 ஆண்டுகளாக தமிழக நலனில் அக்கறை காட்டாத மோடி அரசு அஸ்தமனம் ஆகும் போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது.
தூத்துக்குடி
வர்தா, ஓகி, கஜா ஆகிய புயல்களின் போது உடனடியாக நிவாரணம் எதையும் தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுக்கவில்லை. காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களில் மத்திய அரசு தமிழகத்துக்கு ஆதரவாக நியாயமாக நடந்து கொள்ளவில்லை. 8 வழிச்சாலை அமைத்தது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட போதிலும் 47 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டு வந்தது.
டெல்லியில் போராட்டம்
ஒரு மாதமாக அரை நிர்வாணமாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்களை சந்திக்க பிரதமர் நேரம் கொடுத்ததே இல்லை. இது போன்ற பல்வேறு காரணங்களால் அதிமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம். இது உண்மையா இல்லையா என்பது நாளை தெரிந்துவிடும்.