தமிழகத்தில் திமுகவுக்கே வெற்றி.. எழுச்சிக்கு காரணம் இதுதானா?
Recommended Video
சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி தமிழகத்தில் திமுகவே அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலூர் தவிர மற்ற 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழக அரசியலின் இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் இந்த தேர்தல் நடந்து முடிந்தது.
தமிழகத்தின் இரும்பு பெண்மணி என அழைக்கப்பட்ட அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.
அசைக்க முடியா சக்திகள்
அவரை தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி திமுக தலைவராக இருந்த கருணாநிதி மரணமடைந்தார். கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமிழக அரசியலின் அசைக்க முடியாத சக்திகள் என்பதை மறுக்கமுடியாது.
பாஜக அரசை சார்ந்து
தலைவர்களின் மறைவுக்கு பிறகு அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளும் சந்தித்த முதல் நாடாளுமன்ற தேர்தல் இது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக, பாஜக அரசை சார்ந்தே செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
பாஜகவுக்கு எதிர்ப்பு
தமிழகத்தில் கெய்ல், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நீட் தேர்வு, சேலம் 8 வழிச்சாலை போன்ற மத்திய அரசின் திட்டங்களால் பாஜகவுக்கு பெயரும் செல்வாக்கும் இல்லாத நிலை இருந்தது. சொல்லப்போனால் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்ப்புதான் இருந்தது.
அதிமுகவுக்கு சரிவு
இந்நிலையில்தான் அதிமுக பாஜகவுடன் இணக்கமாக இருந்து இந்த நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியுடன் எதிர்கொண்டது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததை மக்கள் ஏற்றுக்கொள்ளாததே அதிமுக சரிவை சந்திக்க காரணம் என கூறப்படுகிறது.
கடைசி நேர சலசலப்பு
அதேநேரத்தில் திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவும் திமுக மீது மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் பாமகவில் ஏற்பட்ட சலசலப்பும் திமுக அதிக இடங்களை கைப்பற்ற வழியாக அமைந்ததாக கூறப்படுகிறது.
அமமுக, மநீம
மேலும் அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய இரு கட்சிகளும் அதிமுக வாக்குகளை பிரித்ததும் அதிமுக சரிவை சந்திக்கவும் திமுக எழுச்சியை சந்திக்கவும் காரணமாக அமைந்ததாக கருதப்படுகிறது.
வாரி வேட்பாளர்கள்
மேலும் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தெரிந்த முகம். திமுக சார்பில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் அக்கட்சியின் மூத்த தலைவர்களின் வாரிசுகள் என்பதும் திமுக அதிக இடங்களை கைப்பற்ற காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த காரணங்கள் அனைத்தும் கருத்துக்கணிப்புடன் பொய்யாகிப்போகிறதா அல்லது மெய்யாகுமா என்பது 23ஆம் தேதி தெரியவரும்.