முதல் கூட்டத்திலேயே வேகம்.. போக போக அதிக வேகமாக மாறினால்.. ஸ்டாலினையும் மிஞ்சுவார் உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார்
Recommended Video
சென்னை: "3-வது கலைஞராக" உருவெடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், அவரது அப்பாவை போலவே திமுக இளைஞர் அணி செயலாளர் பதவியில் புரட்சியை உண்டுபண்ணுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு சில வருஷங்களுக்கு முன்பு வரை ஸ்டாலினின் மகன் என்பதை தவிர வேறு எந்த அடையாளமும் உதயநிதிக்கு இல்லை. பிறகுதான் நடிகராக அறிமுகம் ஆனார். அது திமுக ஆட்சியின்போதுதான் நடந்தது. தமிழ் திரையுலகமே தங்களது குடும்ப கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக மிகபெரிய சர்ச்சையும் எழுந்து அடங்கியது.
நடிப்பிலும் பிரமாதம் என்று சொல்லிவிட முடியாவிட்டாலும், கருணாநிதி குடும்பத்தில் உதயநிதியின் வருகை பெரிதாகவே பார்க்கப்பட்டது. மெல்ல மெல்ல மெருகேறியதும், நடனம் உள்பட தன்னை அதற்காக பாடுபட்டு திறமையை வளர்த்து கொண்டதையும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. விநியோகஸ்தர், நடிகர், சினிமா தயாரிப்பு என்று தன்னை விரிவுபடுத்தி கொள்ளும்போது, அரசியல் மீதான பார்வை விழுந்தது.
சர்ச்சை
வழக்கம்போல வாரிசு அரசியல் என்ற கூட்டுக்குள் அடைபட்டு போனார். இதை பற்றி கேட்டதற்கு பெரிய அளவு அரசியலில் ஆர்வம் இல்லை என்று சொல்லி வந்தாலும், பிரச்சாரத்தில் இவரது தீவிரம் பலரை யோசிக்க வைத்தது. ஏதோ பதவி பெறுவதற்கான பிரச்சாரமாகவும் இது பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததுபோலவே, பிரச்சாரம் முடிந்த சூட்டோடு சூடாக, உதயநிதிக்கு இளைஞர் அணி பொறுப்பு தர வேண்டும் என்று திருச்சி கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டு, இறுதியில் அனைவரின் விருப்பத்தின் பேரிலும் பொறுப்பு வழங்கப்பட்டது.
பொறுப்பு
எந்த பொறுப்பையும், பதவியையும் எதிர்பார்த்து நான் பிரச்சாரம் செய்யவில்லை, நான் திமுகவின் கடைக்கோடி தொண்டர்களில் ஒருவன் என்று சொல்லி கொண்டே, இளைஞர் அணியின் பொறுப்பை தன்வசமாக்கினார். பிரச்சாரத்தின்போது, உதயநிதியின் இயல்பான பேச்சு, எளிமையான அணுகுமுறை இவரது பிளஸ்ஸாக இருந்தாலும், இந்த பொறுப்புக்கு வந்ததில் இருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை திமுக தொண்டர்களிடம் ஏற்படுத்தி விட்டார்.
பொறுப்பு
இளைஞர் அணி பொறுப்பு என்பது சாதாரணம் கிடையாது. ஸ்டாலினின் திறமை என்ன, ஏதென்று, முழுமையாக கருணாநிதி உணர்ந்தபிறகுதான், அந்த பொறுப்பை கொடுத்தார். அந்த வாய்ப்பினை ஸ்டாலினும் சரியாகவே பயன்படுத்தி கொண்டார். நல்ல வேகம், நல்ல செயல்பாடு, இளைஞர் அணி என்றாலே ஸ்டாலின்தான் என்ற அளவுக்கு உழைத்தார். இது கருணாநிதிக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருந்தது.
12 தீர்மானங்கள்
ஸ்டாலினுக்கு பிறகு இந்த பதவியை ஒருசிலர் வகித்து இருந்தாலும், ஸ்டாலின் அளவுக்கு யாராலும் பேர் வாங்க முடியவில்லை, இந்த பதவியை தொண்டர்கள் உச்சரிப்பதும் குறைந்துதான் காணப்பட்டது. ஆனால் மறுபடியும் அதை கழகத்தில் உச்சரிக்க தொடங்கி வைத்துவிட்டார் உதயநிதி. நேற்றுகூட இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் வலிமை மிக்கவையே.
இரங்கல்
வழக்கமாக மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது ஒரு சம்பிரதாயம்தான். ஆனால் உதயநிதி அப்படி செய்யவில்லை, நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கும், நீலகிரி மற்றும் கேரளாவில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும் சேர்ந்து இரங்கல் தெரிவிக்கும்படி கூட்டத்தை நிமிர வைத்தார்.
சாத்தியமா?
ஒருவேளை, இது சாத்தியமானால், திமுகவை யாராலும் அசைக்கவே முடியாது என்பது உண்மை. ஏனென்றால், உறுப்பினர் சேர்க்கை அதிகமாகி கொண்டே போவதில்தான், அக்கட்சியின் பலமே பொதிந்துள்ளது. உதயநிதியின் முதல் உத்தரவுகளில் வேகம் தெரிகிறது. இந்த வேகம் தொடர்ந்தால், அதி வேகமாக மாறினால் அவர் ஸ்டாலினை மிஞ்சலாம்.. மிஞ்சுவாரா.. பொறுத்திருந்து பார்ப்போம்.