தமிழ்நாட்டில் இந்த வாரம் ஞாயிறு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை? காரணம் இதுதான்.. முழு பின்னணி
சென்னை: கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்படுமா என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக நமது நாட்டில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு ஓமிக்ரான் பரவலுக்குப் பின்னர் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இன்று தினசரி கேஸ்களின் எண்ணிக்கை பல மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் 3 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு மோசமாக உள்ளது.
'வாழ்க்கையில் ஏதாவது சாதிச்சியானு கேட்டா கண்டிப்பாக இதை சொல்வேன்'.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
தமிழ்நாடு
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கடந்த டிசம்பர் மாதத்தில் 3ஆம் வாரம் முதலே வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இத்தனை காலம் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், இப்போது மற்ற மாவட்டங்களிலும் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் நிலையை கையைவிட்டுப் போகாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் நிலைமை இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை,
தமிழ்நாடு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நேற்று மட்டும் 26,981 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் தினசரி பாதிப்பு 8007ஆக உயர்ந்துள்ள நிலையில், செங்கல்பட்டு (2194), கோவை (3082), கன்னியாகுமரி (1008) என பல்வேறு மாவட்டங்களிலும் தினசரி கேஸ்கள் மோசமடைய தொடங்கியுள்ளது. அதேபோல தினசரி கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 30ஐ நெருங்கி வருகிறது. இதே நிலைமை தொடர்ந்தால் மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும்.
கட்டுப்பாடுகள்
இதைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. அதன்படி ஏற்கனவே வரும் ஜன. 31 வரை இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்கே வேண்டும், வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி இல்லை என பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
ஞாயிறு ஊரடங்கு
கொரோனாவை கட்டுப்படுத்த ஜன.9 மற்றும் ஜன.16 எனக் கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கை அரசு அறிவித்திருந்தது. அந்த நாட்களில் அத்தியாவசிய பணிகளைச் செய்யவும் திருமணத்திற்குச் செல்லவும் மட்டுமே அரசு அனுமதி அளித்திருந்தது. பொது போக்குவரத்திற்கு அரசு முற்றிலும் தடை விதித்திருந்தது. இதன் காரணமாக இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்படுமோ என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது.
கர்நாடகா அணுகுமுறை
இருப்பினும், இந்த வாரம் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ள மாநிலங்களில் ஒன்று கர்நாடகா. அங்கேயே வேக்சின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாலும் மருத்துவ உட்கட்டைப்பு தயாராக இருப்பதாலும் வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகம் பாதிக்கப்படும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பொருளாதார பாதிப்பு
இந்தியாவில் தற்போது பெரும்பாலும் ஓமிக்ரான் பாதிப்பே ஏற்படும் நிலையில், இது வேக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கு லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு மருத்துவ உதவியும் பெரும்பாலும் தேவைப்படுவதில்லை. ஒரு வாரக் காலம் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் அவர்களுக்குப் பாதிப்பு சரியாகிவிடுகிறது. இதனால் ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கிற்குத் தளர்வுகளை அறிவிக்கப் பல மாநிலங்களும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஏனென்றால் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தும் போது கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்,
காணும் பொங்கல்
தமிழ்நாட்டிலும் கூட கடந்த வாரம் ஞாயிறு ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு மட்டுமே வெளியானது. அதுவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் என்பதால் மக்கள் அதிகம் வெளியே செல்வார்கள் என்பதால் அதைக் கட்டுப்படுத்தவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதே கூட வரும் வாரங்களில் ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தத் தேவையில்லை என்று சுகாதார வல்லுநர்கள் முதல்வர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் குறிப்பிட்டதாகத் தகவல் வெளியானது.
வாய்ப்பில்லை
எனவே, இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என்றே தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சில கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இன்றும் நாளையும் கேஸ்களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் உயர்ந்தால் மட்டுமே கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவது குறித்து ஆலோசிக்கும் என்றும் கூறப்படுகிறது.