காவிரி டெல்டா பாதுகாப்பு சட்டம் நிறைவேறியாச்சு.. ஆனால், 2 முக்கிய நிபந்தனைகள் இருக்கு கவனிச்சீங்களா!
சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதாவில் ஒரு முக்கியமான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சில நாட்கள் முன்பாக சேலம் நகரில் நடந்த அரசு விழாவில் வைத்து அறிவித்தார். இதற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து சூட்டோடு சூடாக, இதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த சட்ட மசோதாவில் சில முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
காவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
திட்டங்கள் தொடரும்
அதில் ஒரு அம்சம்தான், ஏற்கனவே அங்கே நடைபெறும் திட்டங்கள் தொடரும் என்பது. புதிதாக தோல் பதனிடும் தொழிற்சாலை, ரசாயன ஆலை உட்பட விவசாயம் சாராத வேறு எந்த ஒரு ஆலைகளுக்கும், அங்கே அனுமதி கிடையாது என சட்டத்தில் அம்சம் இடம் பெற்றுள்ளது. எண்ணை கிணறுகள் அமைத்தல் போன்றவற்றுக்கும் அனுமதி கிடையாது. ஆனால், ஏற்கனவே அங்கே அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் மட்டும் தொடரலாம் என அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின்கீழ், திருச்சி, அரியலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் வரவில்லை. இதுகுறித்து சட்ட மசோதா மீதான விவாதத்தின்போது, திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சட்டச் சிக்கல்
பின்னர், விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், விளக்கம் அளித்தார். முதல்வர், கூறியதாவது: ஒரு விவசாயியாக இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்வதில் மிக பெருமையாக கருதுகிறேன். இந்த வாய்ப்பு இறைவனாக காட்சியளிக்கும் ஜெயலலிதா தந்த பாக்கியமாக நினைக்கிறேன். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டமுன்வடிவில் முதலில் புதிய திட்டங்களை தடுப்பது தான் நோக்கமாகும். ஏற்கனவே செயல்படும் பழைய திட்ட விவகாரங்களை தடுத்தால் பல குழப்பங்கள் வரும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர்
அப்படி சட்டச் சிக்கல் ஏற்பட்டால், நாம் கொண்டுவந்துள்ள இந்த சட்டத்தை செயல்படுத்த முடியாமல் போகும் சூழல் வந்துவிடும். எனவேதான், புதிய திட்டங்களுக்கு அனுமதியில்லை என்ற ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கேட்டு மத்திய அமைச்சரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
திருச்சி
தமிழக அரசு வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது. திருச்சி தொழிற்சாலை நிறைந்த பகுதி என்பதால் அதை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் கொண்டுவரவில்லை. அவ்வாறு கொண்டு வந்தால், திருச்சியின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். இவ்வாறு முதல்வர் விளக்கம் அளித்தார். இதையடுத்து சட்ட மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
வெளிநடப்பு
அதேநேரம், சட்டசபை தேர்வுக்குழுவிற்கு, சட்ட மசோதாவை அனுப்பி, அதில் எதிர்க்கட்சிகள் கூறிய அம்சங்களை சேர்க்க வேண்டும் என்று, ஸ்டாலின் வலியுறுத்தியது ஏற்கப்படவில்லை. இதைக் கண்டித்து, மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அவையிலிருந்து திமுக வெளிநடப்பு செய்துவிட்டது. எனவே, ஒருமனதாக இந்த சட்டத்தை நிறைவேற்ற முதல்வர் எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை.
ஹைட்ரோகார்பன்
தமிழகத்தின் 134 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசால் அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், மாநில அரசு அதற்கு இதுவரை ஒப்புதல் தரவில்லை. எனவே ஹைட்ரோகார்பன் திட்டம் என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டம் என்ற பிரிவின்கீழ் வராது, எனவே, ஹைட்ரோகார்பன் திட்டம் டெல்டா மாவட்டங்களில் வராது, என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதேநேரம், ஏற்கனவே உள்ள ஓஎன்ஜிசி பணிகள் வேண்டுமானால் தொடரும் எனக்கூறப்படுகிறது.