ஹைகோர்ட் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த கோரும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (சிஐஎஸ்எப்) பாதுகாப்பை அமல்படுத்தக்கோரிய மனுவுக்கு, தமிழக அரசும், உயர் நீதிமன்ற பதிவாளரும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் விரிவுபடுத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிட்டி சிவில் நீதிமன்றங்கள், குடும்பநல நீதிமன்றங்கள், மத்திய தீர்ப்பாயங்கள், வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள், சிபிஐ சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் சில நேரங்களில் கத்தி குத்து தாக்குதல், தகராறுகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
2-வது மனைவிக்கும் குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை உள்ளது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தற்போது, உயர் நீதிமன்ற வளாகத்திற்கு நுழைய பல இடங்களில் சோதனைக்கு ஆளாக வேண்டியுள்ளதாகவும், சி ஐ எஸ் எப் பாதுகாப்பு வழங்கினால் ஒரு முறை சோதனை மட்டுமே நடத்த வழியேற்படும் எனவும், விசாரணை நீதிமன்றங்கள் அமைதியான முறையில் நடைபெற வாய்ப்பு ஏற்படும் எனவும் மனுவில் அவர் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய பெஞ்ச், உயர் நீதிமன்ற பதிவாளர் மற்றும் தமிழக அரசு மார்ச் 4-ந் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.