உளவுத்துறைக்கு "ரகசிய" தகவல்.. 5 அடுக்கு பாதுகாப்பில் சென்னை ஏர்போர்ட்.. ஊறுகாய் பாட்டிலுக்கும் தடை
சென்னை ஏர்போர்ட்டில் சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்புகள் தீவிரமாகி உள்ளன
சென்னை: சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தி உள்ளது.
நாட்டின் 75வது சுதந்திரதின விழா வரும் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது... இதற்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாகவும் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த சுதந்திர விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக, மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
''பாடல் வரிகளால் சுதந்திர விதையை தூவினர்''.. இந்திய சுதந்திர போராட்டத்தில் கவிஞர்களின் பங்கு
மோப்ப நாய்
இதையடுத்து விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.. முக்கியமாக சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு, மொத்த ஏர்போர்ட்டும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏர்போர்ட்டுக்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி, சந்தேகப்படும் வாகனங்களை, பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டு வருகிறார்கள்.
மெட்டல் டிடெக்டர்
அதேபோல் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் பரிசோதிக்கின்றனர்... விமான நிலைய வளாகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.. அதேபோல, பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. 24 மணி நேரமும் கன்ட்ரோலில் ரூமில் உள்ள சிசிடிவி கேமராவில் கண்காணிப்புகள் நடந்து கொண்டே இருக்கிறது.
ஊறுகாய்
பயணிகள் கொண்டு வரும் பொருட்களையும், ஏற்கனவே இருந்ததைவிட, இப்போது கூடுதலாக சோதனை செய்கிறார்கள்.. திரவ பொருட்கள் அதாவது, ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன... அதேபோல் விமானங்களில் சரக்கு பார்சல்களையும் பலகட்டமாக சோதித்து அதற்கு பிறகே அனுமதிக்கிறார்கள்.. இப்படி ஏராளமான சோதனை நடவடிக்கைகள் உள்ளதால்தான், உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வர வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்...
ரகசிய தகவல்
வரும் 20ம் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும், தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல், கொல்கத்தா, மும்பை, கொச்சி, டெல்லி, பெங்களூரு, அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விமான நிலையங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டு, கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நவீனம் - கேமராக்கள்
மேலும், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தி உள்ளது... வழிபாட்டுத்தலங்கள், மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன... சுதந்திர தின விழா நடைபெறும் செங்கோட்டை பகுதியில் மட்டும் சுமார் 10,000 காவல்துறையினர், பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்... செங்கோட்டை பகுதியைச் சுற்றி 1,000- க்கும் மேற்பட்ட அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒத்திகை
மக்கள் கூடும் பகுதிகளிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பலூன் மற்றும் பட்டங்கள் மூலமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த டெல்லி காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.