சூரிய ஒளியால் இந்தியாவிற்கு கொரோனா வைரஸ் பரவப்போகுதாம்.. லதா சொல்கிறார்.. நம்பாதீங்க மக்களே
சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக லதா என்பவர் பேசி வாட்ஸ்அப்பில் ஒரு ஆடியோ வேகமாக பரவி வருகிறது. யார் அந்த லதா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த பெண்மணி பேசுவது முழுக்க முழுக்க அபத்தமாக உள்ளது. இதையும் பலர் நம்பி ஷேர் செய்து வருகிறார்கள்.
அப்படி என்ன சொல்லியுள்ளார் லதா? வாருங்கள் பார்ப்போம்:
ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் நான்காவது, ஸ்டேஜ், சூரிய வெளிச்சம் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் என்பதால், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று சொல்கிறார்கள். இது பற்றிய உண்மை நிலவரத்தை யாரும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். தயவுசெய்து இந்த விஷயத்தை யாருக்கெல்லாம் சொல்லமுடியுமா அவர்களுக்கெல்லாம் சொல்லுங்கள். ஞாயிற்றுக்கிழமை மட்டும் சூரிய வெளிச்சம் உங்கள் மேலே பட்டு விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி ப்ளா.. ப்ளா.. என்று நீள்கிறது அந்த மெசேஜ்.
யார் இந்த லதா என்று தெரியவில்லை. ஆனால் இத்தாலியிலும் ,சீனாவிலும் இந்த ஒளிக் கதிர் ஏற்கனவே பரவியதாகவும், இப்போதுதான் இந்தியாவுக்கு வருவதாகவும் அவர் வாயில் வருவதையெல்லாம் பேசியுள்ளார். இதையும் நம்பி வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் மக்கள் அதிக அளவுக்கு ஷேர் செய்தபடி இருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் வீடியோ ஒரு ஃபேக் மெசேஜ்.. முன்பே சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்
சந்தேகம் இருந்தாலும் கூட, ஏதோ நம் கடமை ஷேர் செய்வது என்ற வகையில் பலர், ஷேர் செய்து வருவதை பார்க்க முடிகிறது. ஆனால், இப்படியான ஒரு கருத்து அபத்தமானது என்று கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். முதலில் வைரஸ் என்பது தொடுதல் உள்ளிட்டவற்றின் மூலமாகத்தான் பரவுகிறது. சூரிய ஒளிக்கதிர்கள் மூலமாக கிடையாது. அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. எந்த ஒரு வைரசும், இவ்வாறு பரவுவதும் கிடையாது என்கிறார்கள் அவர்கள்.
மேலும், இதற்கு முன்பாக சீனாவில் சூரிய ஒளிக்கதிர் விழுந்ததாகவும், அதன்பிறகு இத்தாலியில் விழுந்ததாகவும் இப்போது இந்தியா மீது விழப் போவதாக கூறுகிறார் அந்த பெண்மணி. சூரிய ஒளிக்கதிர் என்பது உலகம் முழுமைக்கும் பொதுவானது. ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு நாளிலா சூரிய ஒளி விழும்? அதுவும், மாதம் அல்லது வாரக்கணக்கிலா தாமதமாக சூரிய ஒளி ஒவ்வொரு நாடுகள் மீது விழும்?
இவர் கூறும் கருத்து, ஃபேண்டஸி திரைப்படங்களுக்கு, திரைக்கதை எழுதுவதற்கு பயன்படுமே தவிர, அடிப்படை அறிவியல் அறிந்த யாராலும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கருத்து இது. அடுத்ததாக, முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு அம்சமும் இருக்கிறது அவர் பேச்சில்.
இவ்வாறு சூரிய ஒளிக்கதிர் மூலமாக வைரஸ் பரவுவதை தெரிவிக்காமல், சும்மா ஊரடங்கு உத்தரவு என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கூறுகிறார் இந்த பெண்மணி.
இதே கேள்வியை அந்த பெண்மணியிடம் நீங்கள் மாற்றி கேட்டு பாருங்களேன். எதற்காகம்மா, சும்மா ஊரடங்கு என்று சொல்லவேண்டும்..? சூரிய ஒளிக்கதிர் மூலமாக பரவுகிறது என்று அரசே நேரடியாக சொல்லலாமே..? நீங்கள் கூறுவதை அரசு கூறி இருந்தால், வீட்டை விட்டு ஒரு நாய்க்குட்டி கூட வெளியே எட்டிப் பார்க்காதே.. ஏன் அந்த எளிதான வழியை அரசு எடுத்துக் கொள்ளாமல், மறுபடி மறுபடி மக்களிடம் கெஞ்சிக் கொண்டே இருக்கிறது? என்ற கேள்விக்கு அந்த அட்ரஸ் இல்லாத லதா பதில் சொல்ல முடியுமா?
கொரானா வைரஸ் பரவல் என்பது உலக அளவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகி உள்ளது. இதை வைத்துக்கொண்டு விதவிதமாக கற்பனை கதைகளை எழுதி, சமூக ஊடகங்கள் என்ற ஆயுதத்தில், இந்த கட்டுக்கதைகளை பரப்பி.. மக்களை குழப்பி, குளிர்காய்ந்து வருகிறது ஒரு கூட்டம். அதில் ஒருவர்தான் இந்த லதா.
இப்படியானவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். இந்த மெசேஜ் எங்கிருந்து துவங்கியது என்பதை காவல்துறை கண்டறிந்து, அந்த லதா யார், எங்கே உள்ளார் என்பதை கண்டுபிடித்து, தக்க நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோன்ற இக்கட்டான காலகட்டங்களில் மக்களை குழப்பாமல் சும்மா இருப்பதற்கு சில வீணர்கள் முயற்சி செய்வார்கள் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பு.