வாட்ஸ்அப்பில் 3 ப்ளூ, சிகப்பு டிக் வந்தால் அரசு ஆக்ஷன் எடுக்க போவதாக அர்த்தம்.. பரவும் ஃபேக் மெசேஜ்
சென்னை: ஒரு வாட்ஸ்அப் மெசேஜில் உள்ள டிக் மார்க் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. டிக் கலர் மற்றும் அளவை வைத்து, அரசு நம்மை கண்காணிக்கிறது என்று அந்த மெசேஜ் கூறுகிறது.
அந்த வைரஸ் மெசேஜ் இப்படி கூறுகிறது:
ஒற்றை டிக்: செய்தி அனுப்பப்பட்டது
இரட்டை டிக்: செய்தி சேர்ந்துவிட்டது
2 நீல நிற டிக்: மெசேஜ் வாசித்தாகிவிட்டது
3 நீல நிற டிக்: அரசு அந்த மெசேஜை கவனத்தில் எடுத்துள்ளது
2 நீலம், 1 சிவப்பு டிக்: அரசு உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்
1 நீலம், 2 சிவப்பு டிக்: அரசாங்கம் உங்கள் தரவை ஸ்க்ரீன் செய்யும்
3 சிவப்பு டிக்: அரசு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது, மேலும் நீங்கள் நீதிமன்றத்தில் இருந்து
சம்மன் பெறுவீர்கள்
இப்படி சொல்கிறது அந்த மெசேஜ். உண்மை இதுதான்: அரசு இந்த வகையாக எதையும் யோசிக்கவில்லை. இது தொடர்பாக அரசால் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதுபோன்ற அம்சங்களை அறிமுகப்படுத்த அரசு வாட்ஸ்அப்புடன் பேசவில்லை.
மேலும், கொரோனா வைரஸ் தொடர்பான நகைச்சுவைகளை பதிவிடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எந்த உத்தரவும் அரசால் வெளியிடப்படவில்லை. இதுபோன்ற செய்திகள் போலியானவை, இதுபோன்ற போலி செய்திகளை பகிரக்கூடாது என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அண்மையில் உச்சநீதிமன்றத்தில் அரசாங்கம் அளித்த ஒரு, அறிக்கையில், உண்மைகளை சரியான முறையில் சரிபார்த்த பின்னரே கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தது. அதேநேரம், இந்த நோய் பாதிப்பு குறித்து அவ்வப்போது ஊடகங்களுக்கு தெரிவிப்போம் என்றும் அரசு கூறியது.