பழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என பரவி வரும் தகவல் உண்மையா?
சென்னை: பழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் அப்பட்டமான பொய் என்பது தெரிய வந்துள்ளது.
Recommended Video
சமூக வலைதளங்களில் 1914-ம் ஆண்டு வெளியான கைமுறை பாக்கெட் வயித்தியம் என்ற நூலில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என தகவல் பரப்பப்பட்டு வருகிறது. 1914-ம் ஆண்டு பூ.சு. துளசிங்க முதலியாரால் ஏட்டுப் பிரதியும் கை முறையும் அச்சுப் பிரதியுங்கொண்டு ஆய்ந்து யெழுதி முடிவு பெற்று என்ற முகப்புரையுடன் இந்த நூலின் முதல் பக்கம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.
அதில்தான் 1914-ம் ஆண்டு இந்த நூல் அச்சிடப்பட்டதாக இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் பக்கம் 61-ல் கோரோன மாத்திரை என்ற தலைப்பில் பழந்தமிழர் மருத்துவ முறை ஒன்றும் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது மிளகு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி எப்படி இந்த மாத்திர தயாரிப்பது என்பதற்கான செய்முறை விளக்கம் இதில் இடம்பெற்றிருக்கிறது.
ஆனால் உண்மை என்ன தெரியுமா? இந்த நூலின் பக்கம் 61-ல் இடம்பெற்றிருந்தது கோரோசன மாத்திரை என்ற தலைப்புதான். இதில்தான் சில சமூக விரோதிகள் ச என்ற எழுத்தை போட்டோஷாப் மூலம் நீக்கிவிட்டு கோரோன மாத்திரை என பொய்யாக ஒரு படத்தை உருவாக்கி அதை சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர்.
தற்போது ஒரிஜனல் 61-ம் பக்கமும் எடிட் செய்யப்பட்ட 61-ம் பக்கமும் இணைக்கப்பட்டு உண்மை எது? என்பதை விளக்கும் செய்திகளும் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.