Fake News: வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா?!
மஞ்சள், வேப்பிலை பயன்படுத்துவதால் கொரோனா ஓடிவிடாது
சென்னை: மஞ்சளும் எலுமிச்சையும் பயன்படுத்தினால் கொரோனா ஓடிரும் என்று வாட்ஸ்அப்களில் சிலர் தகவல்களை பரப்பி வருகின்றனர்.. ஆனால் இவை அத்தனையும் தவறான தகவல்தான்.. துளியும் அறிவியல்பூர்வமாக நிரூபணமாகவில்லை என்பதே உண்மை.. உலகம் ஒரு இக்கட்டமான சூழலை எதிர்கொண்டு வரும்வேளையில் இதுபோன்ற உறுதியற்ற பதிவுகளை போட்டு பொது மக்களையும் குழப்பி வருவது வேதனையை அளித்து வருகிறது!!
Recommended Video
அன்றைய காலங்களில், அதாவது மருத்துவ வசதி குறைவான காலகட்டங்களில் நம் மக்கள் கிருமிநாசினிகளை இயற்கை முறையில் பயன்படுத்தி வந்தனர்... முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது தெரியாமலேயே இவை புழக்கத்தில் கலந்து இருந்தன.
வீட்டு வாயில்கள் முன்பு வேப்பிலையை கட்டி... வாசல்களில் மாட்டு சாணம் கொண்டு தெளித்தனர். வேப்பிலையை போலவே மஞ்சளும் சரியான கிருமிநாசினி.. அன்று நம் பெரியவர்கள் வெகு இயல்பாகவே இத்தகைய தடுப்பு நடவடிக்கையை தினசரி கையாண்டு வந்தனர்.. ஆரோக்கியமும் தழைத்தோங்கியது!
மஞ்சள், வேப்பிலை
சமீபகாலமாக புது புது நோய்கள் பெருக்கெடுத்து வரும் நிலையில், அன்றைய இயற்கை முறையையே மக்கள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர்... கொரோனாவில் இருந்து தப்பிக்க மஞ்சள், பூண்டு, வேப்பிலை கலந்து இயற்கை முறையில் கிருமிநாசினி தயார் செய்து அதனை தெளிக்க ஆரம்பித்துள்ளனர். கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் பெண்கள் இந்த நீரை தெளித்து வருகின்றனர்.
மஞ்ச தண்ணி
தாங்கள் தெளிப்பதுடன், மற்றவர்களும் அப்படியே தெளியுங்கள் என்றும் வலியுறுத்துகின்றனர்.. இது சம்பந்தமான வீடியோக்கள், பதிவுகளை சோஷியல் மீடியாவில் போட்டு வருகின்றனர். அவ்வளவு ஏன், கோயம்புத்தூரில் அரசு பஸ் ஒன்று முழுக்க மஞ்ச தண்ணியை தெளித்து, வேப்பிலையை கட்டிவிட்டு மங்கலகரமாக இன்டர்நெட்டில் வலம் வந்ததையும் பார்க்க முடிந்தது.
கிருமிநாசினி
ஆனால், மஞ்சள், வேப்பிலை, எலுமிச்சம் இவைகளால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம் என அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.. இந்த பொருட்கள் அத்தனையும் நம் உடலுக்கு நல்லதுதான்.. சிறந்த ஆன்ட்டிபயாடிக் என்பதையும் மறுப்பதற்கில்லை.. அதனால்தான் மஞ்சளுடன் வேப்பிலை அரைத்து தேய்த்து அம்மையை விரட்டினார்கள் மக்கள்.. இப்போதும் மஞ்சளின் மகிமை இம்மியும் குறையவில்லை.
புது புது தகவல்கள்
ஆனால் கொரோனா என்பது இதுவரை நம்மை தாக்கிய கொள்ளை நோய் போல இல்லை.. இது அபாயகரமான தொற்று.. என்ன விதமான வைரஸ், இதன் அறிகுறிகள் இதுதான் என்பதை இன்னமும் முழுசாக கண்டுபிடித்து உறுதியாக சொல்ல முடியவில்லை. தினமும் கொரோனா பற்றின ஒரு தகவல் வந்து கொண்டே உள்ளன.. இதுதான் அறிகுறி என்பதையும் தாண்டி அறிகுறிகளே இல்லாமல்கூட கொரோனா புகுந்துவிடும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.. பெரிய பெரிய நாடுகளே தங்கள் மக்களை காப்பாற்ற வழியின்றி விழி பிதுங்கி போய் உள்ளது.
வேப்பிலை
கண்ணெதிரே செத்து மடியும் மக்களை கண்டு காப்பாற்ற வழியின்றி திணறி கதறி கொண்டிருக்கின்றன.. அந்த வகையில் வெறும் மஞ்சள், வேப்பிலையை வைத்து கொண்டு சிலர் தங்களையும் ஏமாற்றி கொண்டு, அடுத்தவர்களையும் குழப்பி விட்டு வருகின்றனர்.. இது உண்மை இல்லை... உலகம் இதுவரை சந்திக்காத பயங்கரமான வைரஸ் இது.. இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கவே ஒன்றிரண்டு வருடங்கள் ஆகும் என்கிறார்கள்.
வதந்திகள்
சமூக விலகலை முழுமையாக கடைப்பிடித்து கொண்டும், நம் கைகளை சுத்தமாக அடிக்கடி கழுவி கொண்டும் இருப்பதுதான் இப்போதைக்கு சிறந்த மருந்தே தவிர, மஞ்சளும், வேப்பிலையும், எலுமிச்சையும் கிடையாது! இதுபோன்று வாட்ஸ்அப்களில் சிலர் பொய்யான, தவறான பதிவுகளை போட்டாலும் யாரும் நம்ப வேண்டாம்.. அதேசமயம் உடம்பில் ஏதாவது தொற்று குறித்த அறிகுறி தெரிந்தால் உடனே இது சம்பந்தமாக டெஸ்ட் எடுத்து கொள்வதே சிறந்தது.. எப்பேர்ப்பட்ட மனிதனையும் ஒரு புரட்டு புரட்டி போட்டு தன்னுடன் இழுத்து கொண்டு போகும் இந்த கொடூர கொரோனாவின் கண்ணுக்கு மஞ்சளும் தெரியாது.. வேப்பிலையும் தெரியாது!