இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள்.. நடவடிக்கை பாயுமா?
சென்னை: இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் டுவிட்டர் கணக்கே இல்லாத போது அவரது பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள் செயல்படுவது தெரியவந்துள்ளது. இதை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என கேள்வி எழுந்துள்ளது.
இஸ்ரோ தலைவராக உள்ளவர் சிவன். தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சிவன் இன்று நாடே உற்றுநோக்கும் சந்திரயான் 2 திட்டத்தை 98 சதவீதம் நடத்தி காட்டியுள்ளார்.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளே நிலவின் தென் துருவத்துக்கு விண்கலத்தை பல முறை தோல்வி கண்டுள்ளது. இதன் பிறகே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவோ முதல் முயற்சியிலேயே 95 சதவீத வெற்றியை தந்துவிட்டது.
மீதி 5 சதவீத வெற்றி லேண்டரிலிருந்து சிக்னல் கிடைக்காததால்தான் நடந்தது. அதிலும் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டதால் நிச்சயம் லேண்டரை தரையிறக்க முயற்சிப்போம் என சிவன் தெரிவித்துள்ளார். எனவே தற்போது இஸ்ரோ தலைவர் சிவன் அனைவராலும் பேசப்பட்டு வருகிறார்.
இதனால் லேண்டரின் நிலை குறித்து அறிவதற்காக அவரது இஸ்ரோவின் டுவிட்டர் கணக்கை அனைவரும் பின்பற்றி வருகின்றனர். இந்த நேரத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் டுவிட்டரில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அவரது கணக்குதான் என நினைத்து போலி கணக்கில் வெளிவரும் தகவல்களை சிலர் பகிர்ந்து வருகின்றனர். இதனால் மக்களை குழப்ப வாய்ப்புள்ளது. உண்மையில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இல்லை என்பதுதான் உண்மையான தகவலாகும்.