சென்னைக்குத்தான் பாதிப்பு.. இனியும் அந்த மதிப்பு இருக்காது.. எச்சரிக்கும் பொருளாதார வல்லுநர்கள்!
ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சரிவு நாடு முழுக்க பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சென்னை: ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சரிவு நாடு முழுக்க பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதனால் சென்னைதான் அதிகம் பாதிக்கப்பட போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சில நகரங்கள் அந்த நகரத்தின் தொழிலை வைத்து பிரபலம் அடைந்து இருக்கும். உதாரணமாக மும்பையை இந்தியாவின் பொருளாதார தலைநகர் என்று கூறுவார்கள்.
பெங்களூரை இந்தியாவின் சிலிக்கான் சிட்டி என்பார்கள். அதேபோல்தான் அதிகமாக ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தொழிற்சாலைகளை கொண்டு இருக்கும் சென்னையை இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைத்து வருகிறார்கள்.
இந்தியாவின் டெட்ராய்ட் ஏன்
சென்னையின் உள்ளேயும், சென்னையை விட்டு வெளியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும் செல்லும் போது நீங்கள் வரிசையாக ஆட்டோமொபைல் நிறுவனங்களை பார்த்து இருக்கலாம். சென்னையின் பொருளாதார வளர்ச்சிக்கு இதுதான் மிக முக்கியமான காரணமாக இருந்தது. திமுக அதிமுக ஆட்சிகள் செய்த மிகப்பெரிய சாதனை இது என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.
ஆனால் என்ன
ஆனால் இனி உண்மையில் அப்படி காலரை தூக்கிவிட்டுக்கொண்டு சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆம் இன்னும் 6 மாதங்களில் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை மிக மோசமான சரிவை சந்திக்க போகிறது. அது மட்டுமில்லை இப்போதே தொடர்ந்து ஆட்டோமொபைல் பெரிய அளவில் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்பட போவது சென்னைதான்.
பெரிய அதிர்ச்சி
ஆட்டோமொபைல் துறையில் கடந்த 4 மாதங்களில் மொத்தம் 3,50,000 பேர் வேலையைவிட்டு நீக்கப்பட்டு உள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிகமாக டீலர்களிடம் பணிபுரியும் நபர்கள்தான் வேலையை இழந்து உள்ளனர் , 2,40,000 பேர் வரை டீலர் லெவர் நிறுவனங்களில் வேலையை இழந்து உள்ளனர்.
மிக மோசம்
நேரடியாகவும் மறைமுகமாகவும் இப்படி பலர் தங்களது வேலையை இழந்து இருக்கிறார்கள். தொழிற்சாலைகளில் பணிபுரியும் 1,00,000 பணியாளர்கள் வேலையை இழந்து உள்ளனர். அதேபோல் நேரடியாக நிறுவனத்தில் பணி புரியும் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் 15,000 பேர் வேலையை இழந்து உள்ளனர்.
என்னவேண்டுமானாலும் நடக்கலாம்
முக்கிய நிறுவனங்களில் பெரிய நிர்வாக பொறுப்பில் இருக்கும் சிலரும் வேலையை இழந்து உள்ளனர். சென்னையில்தான் அதிக அளவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இருப்பதால் சென்னைதான் இதனால் நேரடியாக பாதிக்கப்படும். சென்னையில் பணிபுரியும் பலர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர், இனியும் நீக்கப்படலாம்.
ஏன் இப்படி
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள்தான் இழப்பிற்கு காரணம் என்கிறார்கள். பெட்ரோல் டீசல் விலை உயர்வும், ரூபாய் மதிப்பு சரிவும், ஜிஎஸ்டி மூலம் அதிகப்படியான வரி விதிப்பும் இழப்பு ஏற்பட ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. இதனால் சென்னை பெரிய அளவில் அதன் மதிப்பை இழக்க போகிறது என்று கூறுகிறார்கள்.
எப்படி பெங்களூர்
சத்தியம் நிறுவனம் முறைகேட்டில் பெங்களூர் மோசமான பொருளாதார சரிவை சந்தித்தது. அதில் இருந்து வெளியே வர பெங்களூருக்கு 6 வருடங்கள் ஆனது. ஐடி துறையில் அப்போது ஏற்பட்ட சரிவு போல தற்போது ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட உள்ளது. இது சென்னையை பெரிய அளவில் பாதிக்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.