தவறான வினாக்கள் கேட்கப்பட்ட விவகாரம்.. குரூப் 1 தேர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
சென்னை: தமிழ்நாடு பப்ளிக் சர்விஸ் கமிஷன் நடத்திய குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்துஇ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வு நடைபெற்றது. இதில் 1,68,000 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். குரூப் 1 தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் குரூப் 1 தேர்வுக்கான மாதிரி விடை பட்டியலில் பல விடைகள் தவறாக உள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மீது வழக்கு தொடர்ந்தார்.
கேள்வித்தாள் குளறுபடி மற்றும் வெளிப்படையின்மை உள்ளிட்ட காரணங்களால் நடைபெற்று முடிந்த குரூப் 1 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, தேர்வின் போது கேட்கப்பட்டிருந்த 24 கேள்விகள் தவறானவை என டிஎன்பிஎஸ்சி ஒப்பு கொண்டது. பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விரிவான அறிக்கையை டிஎன்பிஎஸ்சி தாக்கல் செய்தது.
அதில் நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், மனுதாரர் விக்னேஷ் உள்ளிட்ட மனு அளித்த அனைவருக்கும் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் கொடுக்கப்பட்டு விட்டது இருந்தும் அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என விளக்கம் அளித்தது.
கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கிவிட்டதாக கூறிய டிஎன்பிஎஸ்சி-யின் பதிலை நீதிமன்றம் ஏற்று கொண்டது. இனிவரும் காலங்களில் மிக கவனமாக கேள்வித்தாள்களை தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
மேலும் இவ்வழக்கில் கருத்து தெரிவித்திருந்த ஐகோர்ட் தேர்வு எழுதிய ஒருவர் தொடர்ந்த வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், இதனை பொது வழக்காக கருதி ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகள் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விட்டதால், குரூப் 1 தேர்வை ரத்து செய்ய முடியாது என கூறி விக்னேஷ் மனுவை தள்ளுபடி செய்தது.