வாரிசு அரசியல்.. இதிலும் திமுக - அதிமுகதான் போட்டா போட்டி.. ஒருவருக்கொருவர் இளைப்பில்லை!
Recommended Video
சென்னை: இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அதிமுகவும், திமுகவும் இன்னமும் திருந்தவில்லை.. இப்படியேதான் இருப்போம் என வாரிசுகளை வேட்பாளர்களாக களம் இறக்கிவிட்டு நிரூபித்துள்ளன.
நேற்று இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால் முந்தைய தேர்தல்களின்போது வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்தால் அப்படி ஒரு ஆர்வமும், எதிர்பார்ப்பும் இருக்கும். ஆனால் நேற்று தமிழக மக்களிடையே அது மிஸ்ஸிங்!
எந்த வேட்பாளர் லிஸ்ட்டை பார்த்தும் யாருமே ஷாக் ஆகவில்லை... அதேபோல, அந்த லிஸ்ட்டும் பெரிய அளவு தாக்கத்தையும் தரவில்லை. காரணம்.. வாரிசுகளின் இறக்குமதிதான்!
சற்றுநேரத்தில் வெளியாகிறது தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல்.. சுதீஷ்.. விஜய பிரபாகரன் போட்டி?
பொன்முடி மகன்
முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வடசென்னையிலும், தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன் தென்சென்னையிலும், மத்திய சென்னையை மாறன் மகன் தயாநிதி மாறனும் என ஒட்டுமொத்த தலைநகரை வாரிசுகளுக்கு கூறுபோட்டு தந்துவிட்டார்கள். துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூருக்கும், பொன்முடி மகன் கவுதம் சிகாமணி கள்ளக்குறிச்சிக்கும், கருணாநிதி மகள் கனிமொழி தூத்துக்குடிக்கும் என ஒதுக்கப்பட்டுவிட்டனர்.
வாரிசுகள்
இதேதான் அதிமுகவிலும்!! தென் சென்னையில் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனும், தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும், திருநெல்வேலியில் பி.ஹெச் பாண்டியன் மகன் மனோஜ்பாண்டியனும், மதுரையில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யனும் போட்டியிடுகிறார்கள்.
தந்தை எவ்வழியோ...
அதாவது, கருணாநிதி இருந்தபோது என்ன செய்தாரோ, அதேதான் இப்போதும் திமுகவில் நடந்துள்ளது. தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழியே என நிரூபித்துள்ளார் ஸ்டாலின். ஆனால் வாரிசு அரசியலை இவ்வளவு நாள் எதிர்த்து வந்த அதிமுகவும் இந்த லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது அதிர்ச்சிதான்! ஜெயலலிதா இருந்தபோது இப்படியெல்லாம் பெருமளவில் வாரிசு அரசியல் கிடையாது.
ஆ.ராசா
இதுபோக கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பதவி பொறுப்பை இவ்வளவு காலம் அனுபவித்தவர்களுக்கு இன்னமும் ஆசை விடவில்லை. டி.ஆர்.பாலு, சிவபதி, தம்பிதுரை, அக்ரிகிருஷ்ணமூர்த்தி, M.S.M ஆனந்தன், ஆ.ராசா இப்படி இவர்களே திரும்பவும் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
பட்டை நாமம்
ஒன்று, இருப்பவர்களே மீண்டும் சீட் வாங்கி கொள்கிறார்கள், இல்லையென்றால், வாரிசுகளை களமிறக்கி விட்டுவிடுகிறார்கள். ஆக மொத்தம், திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சியுமே இன்னும் மாறவில்லை.. திருந்தவில்லை.. இப்படியே இந்த தலைமைகள் இருந்தால், அந்தந்த கட்சிகளில் இவ்வளவு நாள் உழைத்தவர்கள், பாடுபட்டவர்கள் கதிதான் என்ன? அவர்களின் எதிர்காலம்தான் என்ன? ஒவ்வொரு தேர்தலுக்கும் இவர்களுக்கு பட்டை நாமம் போடுவதே இரு கட்சிகளுக்கும் பிழைப்பாகிவிட்டது!